"சுத்த முட்டாள்தனம்.." கோபத்தின் உச்சத்தில் நடிகர் விஷால்! கரூர் விஜய் துயரம் குறித்து காட்டம்
சென்னை: கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் மிக மோசமான சம்பவம் நடந்தது. அதில் சிக்கி 36+க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் முட்டாள்தனமானது என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாத துயரமான நிகழ்வு என்றும் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் சனிக்கிழமைகளில் ஒவ்வொரு ஊருக்கும் போய் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்குக் கூட்டம் அதிகமாகவே சேர்வதால் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி கொடுத்து வருகிறார்கள். இருப்பினும், பல கட்டுப்பாடுகளை தவெகவினர் பின்பற்றுவதில்லை என்ற விமர்சனங்கள் இருந்து கொண்டே தான் இருந்தது.

மிக துயரமான சம்பவம்
இந்தச் சூழலில் தான் நேற்று கரூரில் விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது மிக மோசமான துயரச் சம்பவம் நிகழ்ந்தது. விஜய் பேசிக் கொண்டிருந்தபோது பலரும் முந்தி கொண்டு வந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தத் துயரமான சம்பவத்தில் 36+க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான ஒரு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
விஷால் காட்டம்
இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கரூருக்கு நேரடியாகவே செல்கிறார்கள். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரும் இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நடிகர் விஷாலும் இந்த விவகாரத்தில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முட்டாள்தனமானது
இது தொடர்பாகத் தனது விஷால் தனது ட்விட்டரில், "முழுக்க முழுக்க முட்டாள்தனமானது.. நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரமான நிகழ்வு.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைத்தால் இதயம் வலிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய்யின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறேன். இதுவே இப்போது அக்கட்சி செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாக இருக்கும்
இனி எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு அரசியல் பேரணியிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
கரூர் துயரம்
இந்த மோசமான சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இரவே கரூருக்கு விரைகிறார். ஏற்கனவே, அமைச்சர் அன்பில் மகேஷ், கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டனர். அதேபோல மூத்த அதிகாரிகள் பலரும் கரூர் சென்றுள்ளனர். மருத்துவமனைகளில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்க அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் துயரம் தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications