பாண்டிக்கு பார்சல் கட்டப்படும் புஸ்ஸி! தவெக பொதுச் செயலாளராகும் ஆதவ்! விஜய் எடுக்கப் போகும் முடிவு?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற தயாராகி வருகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி மாநில தலைவராக நியமிக்க இருப்பதாகவும் செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிரடி அறிவிப்பாக அர்ஜூனாவை பொதுச் செயலாளராக்க த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால், வெற்று விளம்பரத்தை தவிர அக்கட்சியால் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முதன்முறையாக முன்னெடுத்த தேர்தல் பிரச்சாரமும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி விட்டது.
சிறிய சிறிய கட்சிகள் கூட விஜயை விமர்சிக்கும் அளவுக்கு வைத்து விட்டது நிர்வாகிகளின் செயல்பாடு. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது முக்கிய மாற்றங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம்
கட்சி நிர்வாகத்தில் செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றி, புதிய பொறுப்புகளை ஒதுக்க உள்ளார். அதேசமயம், அர்ஜூனாவை பொதுச் செயலாளராக நியமிக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கட்சி முதன்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க 5 மாதங்களே உள்ள நிலையில், மாநில மாநாடுகள் மற்றும் மாவட்ட பிரசார பயணங்கள் மூலம் மக்கள் தொடர்பை வலுப்படுத்தி வந்தார்.
விஜய் மாற்றம்
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, ஒரு மாதமாக வீடு மற்றும் அலுவலகங்களில் சில நாட்கள் மட்டுமே கட்சி நடவடிக்கைகள் நடந்து வந்தது. இதற்கிடையில், கட்சி நிர்வாகிகளுடன் நேரடி ஆலோசனைகள் நடத்தி, அவ்வப்போது வீடியோ கால்கள் மூலம் தலைமையின் முடிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போதைய பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருந்தாலும், மக்கள் பிரச்சனைகள் குறித்து பேட்டி கொடுக்கவில்லை, அறிக்கைகள் வெளியிடவில்லை.
ஆதவ் அர்ஜூனா
இதனால், ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரியிலும் விஜய்க்கு பெரும் செல்வாக்கு இருக்கும் நிலையில், புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட புஸ்ஸி ஆனந்த அம்மாநில தலைவராக நியமிக்கப்படவுள்ளது. மேலும் தற்போது இருக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. மேலும், சிடிஆர் ர்மல்குமார், அருண்ராஜ், ராஜ்மோகன் போன்ற நிர்வாகிகளின் பதவிகளையும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பொறுப்புகள்
மாவட்ட செயலாளர்களில் பலர் இன்னும் கட்சிப் பணிகளை முழுமையாக செய்யவில்லை. அவர்களை விலக்கி விட்டு, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து, ஆர்ஜூனா தலைமையில் கட்சியை வலுப்படுத்த முயற்சி நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல விரும்பிய விஜய், நிகழ்ச்சியை கரூர் மண்டபத்தில் நடத்த முயன்றாலும், லோக்கல் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக அது சாத்தியமாகவில்லை.
கட்சி நிர்வாகம்
இதனால், நிகழ்ச்சியை திருச்சியில் நடத்தும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விஜய் அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆறுதல் சொல்வார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தவெகவில் நடக்கவுள்ள இத்தகைய மாற்றங்கள், முக்கிய பொறுப்புகளைச் சரியானவர்களுக்கு ஒதுக்கி, கட்சியின் செயல்திறனை மேம்படுத்த விஜய்க்கு உதவுமா என கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் பல ஆண்டுகளாக ஆனந்த் விஜயுடன் இருக்கும் நிலையில் அவரை நீக்க மாட்டார் எனவும், தற்போது வெளியாகும் தகவல்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுகவினர் திட்டமிட்டு பரப்பும் அவதூறு செய்தி எனவும் சில நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications