இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை... இந்தா சொல்லிட்டாரு விஜயபிரபாகரன்
இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். 10 ஆண்டுகளாக அதிமுகவை வாழவைக்கும் இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக உழைப்பேன். இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்த நிலையில் தேமுதிக இன்று அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. தொகுதி பங்கீடு கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையால் தேமுதிக விலகியுள்ளது.
41 தொகுதிகள் கேட்ட தேமுதிக 23 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது.

தன்மானத்தை விட மாட்டோம்
கூட்டணியில் இருந்து விலகிய உடனேயே அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார் விஜயபிரபாகரன். தலையே போனாலும் தன்மானத்தை விடமாட்டோம் என்று சொன்ன அவர், அதிமுகவை வீழ்த்துவதற்காக தேமுதிக தொண்டர்கள் வேலை செய்வார்கள் என்று சொன்னார்.

நாங்கள் இனி சத்ரியர்கள்
இதுநாள்வரை சாணக்கியர்களாக இருந்த நாங்கள் இனி சத்ரியர்களாக மாறும் காலம் வந்து விட்டது என்று கூறினார். சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஜயபிரபாகரன், அப்பாவும் அம்மாவும் அதுபற்றி அறிவிப்பார்கள் என்று சொன்னார்.

அமைச்சர் பதிலடி
விஜயபிரபாகரனின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். விலகியவர்கள் இதுபற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொன்னதோடு எங்கிருந்தாலும் வாழ்க என்று சொன்னார். அதே நேரத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன், தேமுதிகவை கூட்டணியில் இருந்து விலக்கியிருக்கக் கூடாது என்று சொன்னார். தேமுதிக மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

அப்பா போல உழைப்பேன்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிகவை கட்டிக்காக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருபவர் கேப்டன். என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக உழைப்பேன் என்று தெரிவித்தார்.

ஒருபோதும் கூட்டணியில்லை
இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. 10 ஆண்டுகளாக அதிமுகவை வாழவைக்கும் இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம் என்று கூறியுள்ளார். அதிமுக, திமுக உடன் எந்த காலத்திலும் கூட்டணியில்லை என்று சொன்ன பல கட்சிகள் மீண்டும் அதிமுக, திமுக உடன் இணைந்துதான் இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. விஜயபிரபாகரனின் இந்த கொள்கை முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது என்று பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications