Tvk Vijay: தவெக ஆர்ப்பாட்டத்தில் அருண்ராஜ் சொன்ன வார்த்தை..டக்கென திரும்பிய விஜய்! தொண்டர்கள் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: காவல்துறையில் ஈரல் மட்டுமல்ல.. இதயமும் அழுகிவிட்டது.. மூளையும் அழுகிவிட்டது. காவல்துறையின் மூளையாக செயல்பட வேண்டிய முதல்வர் ஸ்டாலின் முற்றிலும் செயலிழந்து இருக்கிறார். இதற்கு தார்மீக பொறுப்பு எல்லாம் அல்ல.. நேரடி பொறுப்பே முதல்வர் தான். எனவே அவர் பதவி விலக வேண்டும்.. ஆனால் அதை செய்ய மாட்டார். அதற்கு பதிலாக அவரிடம் உள்ள காவல் மற்றும் உள்துறையை வேறு ஒருவருக்காவது ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தவெக ஆர்ப்பாட்டத்தின் போது அருண்ராஜ் ஐஆர்.எஸ் கூறினார். அப்போது விஜய் அவரை கவனித்தார். உடனே தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
தவெக ஆர்ப்பாட்டம் சென்னை வேதானந்தா சாலையில் இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக விஜய் கலந்துகொண்டார். விஜய் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார் என்று அறிந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை வேதானந்தா சாலைக்கு காலை முதலே வரத் தொடங்கினர்.

அருண்ராஜ் பேச்சு
இந்த ஆர்ப்பாட்டத்தில் "சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்று தவெகவினர் பதாகைகள் ஏந்தி நின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அருண்ராஜ், ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது துறையை வேறு யாருக்காவது ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
கலைஞர் என்ன சொன்னார்?
ஆர்ப்பாட்டத்தின் போது அருண்ராஜ் கூறியதாவது:- கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கலைஞர் சொன்னார் காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகிவிட்டது என்றார். ஆனால் இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல.. இதயமும் அழுகிவிட்டது. இதயம் மட்டுமல்ல.. மூளையும் முற்றிலும் அழுகிவிட்டது.
காவல்துறையின் மூளையாக செயல்பட வேண்டிய முதல்வர் ஸ்டாலின் முற்றிலும் செயலிழந்து இருக்கிறார். ஒரு எஃப் ஐ ஆர் கூட போடாமல், போலீஸ் நிலையத்தில் இல்லை.. வேறு ஒரு இடத்திற்கு கடத்தி கொண்டு சென்று அடித்தே கொன்றிருக்கிறார்கள் என்றால், காவல்துறைக்கும் கூலிப்படைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..
இதற்கு முதல்வர் தார்மீக பொறுப்பு எல்லாம் அல்ல.. நேரடி பொறுப்பே முதல்வர் தான். எனவே தான் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் அவர் இதை செய்ய மாட்டார். இன்னும் 8 மாதங்கள் தான் இருக்கிறது. எனவே குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்..
விஜய் ஆட்சியில் நீதி
நீங்கள் வைத்திருக்கும் காவல் மற்றும் உள்துறையை வேறு யாருக்காவது ஒதுக்குங்கள். உங்களது துறையை அமைச்சரவையில் வேறு ஒருவருக்கு ஒதுக்கி கொள்ளுங்கள்.. கொடுத்துவிட்டு உங்கள் பிரச்சாரத்தை தொடங்குங்கள்.. ஓரணியில் தமிழகம் போன்ற வேலைகளில் ஈடுபடுங்கள். மக்களுக்கு நீங்கள் சொல்லும் சாரி எல்லாம் வேண்டாம்.. நீதி தான் வேண்டும்.. இந்த நீதி கிடைக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் போது அனைவருக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் தலைமையில் அடுத்த ஆண்டு ஆட்சி நடக்கும் என்று அருண்ராஜ் சொன்னதும் தொண்டர்கள் ஆக்ரோஷமாக கரகோஷம் எழுப்பினர். இரு கைகளையும் உயர்த்தி கரகோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications