மேடம் ஜெயலலிதானு நினைப்பு.. படக் படக்குனு புஸ்ஸி காலில் விழும் நிர்வாகிகள்! இது விஜய்க்கு தெரியுமா?
சென்னை: 'மாப்ள அவரு தான் ஆனா அவரு போட்ருக்க சட்டை என்னது' என்பது போல தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக விஜய் இருந்தாலும் புஸ்ஸி ஆனந்த் தான் நிழல் தலைவராக செயல்படுவதாக கூறப்படுகிறது. விஜயின் காலில் கூட விழாத நிர்வாகிகள் ஆனந்தின் காலில் படக் படக்கென விழும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் ஆனந்தும் காலில் விழுவதைத் தான் விரும்புகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் கள அரசியலுக்கு ஆயத்தமாகி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

கோவை கொடுத்த உற்சாகத்தால் தற்போது மதுரையில் மாநாட்டை நடத்த தயாராகி வருகிறார் விஜய். இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக்கழகத்தில் மேல் மட்டத்திலிருந்து நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவில் இருந்து வந்தவர்கள் கட்சியில் வளர்ந்து விடக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் சௌந்தர்ராஜன், தாடி பாலாஜி உள்ளிட்டோர் விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்து தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர்களுக்கு இதுவரை பதவி அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக பேசிய தாடி பாலாஜி," தன்னை தாண்டி யாரும் விஜய்யை பார்த்து விடக் கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் தெளிவாக இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் விஜயை சந்திக்க விடுவதில்லை. இந்த வயதிலும் ஆனந்த் நன்றாக வேலை பார்க்கிறார்.
எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் ஆனந்தின் பார்வை விஜய் மேல் தான் இருக்கிறது. அவரை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். நானும் விஜய்காகத்தான் கட்சிக்கு வந்தேன். எனக்கு பதவி கிடைக்கும் என்பதற்காக வரவில்லை. ஆனால் நான் வந்தால் நான் தான் ஃபோகஸ் ஆவேன். தன்னால் ஃபோகஸ் ஆக முடியாது. என்பதால் தான் என்னையே ஓரம் கட்டினார்கள் என குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக சில கட்சி நிர்வாகிகளிடம் பேசிய போது அது உண்மைதான் என்கின்றனர். புதுச்சேரியை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பது ஆனந்தின் விருப்பம். அதற்காக விஜய் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய 'ப்பா' சந்திரசேகரையே கட்சியில் வராமல் பார்த்துக் கொண்டார். தன்னை விட நடிகர்கள் கட்சியில் வளர்ந்து விடக்கூடாது என்பது ஆனந்தின் விருப்பம். அதே நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என அவர் காட்டிக் கொள்கிறார்.
மேலும் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள நிர்வாகிகள் அவரை வந்து சந்திக்க வேண்டும் என்கிறார். சில நிர்வாகிகள் ஆர்வக்கோளாறில் அவர் காலில் விழுகிறார்கள். அதை பார்த்து மற்ற நிர்வாகிகளும் அடுத்தடுத்து அவர் காலில் விழுகிறார்கள். ஆனால் அதை தடுக்காமல் ஆசிர்வாதம் செய்து வருகிறார். இதுவரை விஜய் காலில் கூட நிர்வாகிகள் விழுந்ததில்லை. அதை விஜய்யும் விரும்பவில்லை. ஒருமுறை ஒரு ரசிகர் காலில் விழுந்த போது இனிமேல் யாரும் எனது காலில் விழக்கூடாது .வேறு யாரு காலிலும் விழக்கூடாது என விஜய் மைக்கிலேயே பேசினார். அப்போது நாங்களும் உள்ளே இருந்தோம்.
ஆனால் வெளியே வந்தவுடன் புஸ்ஸி ஆனந்த் தனது காலில் விழ வேண்டும் என சிக்னல் காட்டியதை பார்த்தேன். தற்போது கூட விழுப்புரத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற ஆனந்தின் காலில் நிறைய பேர் விழுந்தனர். அதை வீடியோ எடுத்து போட்டு இருக்கின்றனர். தற்போது அதனாலேயே கட்சியின் மீது விமர்சனம் எழுந்திருக்கிறது. அதிமுகவில் நிர்வாகிகளை அடிமை போல ஜெயலலிதா நடத்துகிறார் என்ற விமர்சனம் இருந்தது. தற்போது ஆனந்தும் அதையேதான் செய்து வருகிறார். கட்சியின் தலைவர் காலில் விழுந்தால் கூட பரவாயில்லை. செயலாளர் காலில் எதற்கு விழ வேண்டும். இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா என தெரியவில்லை" என புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications