துபாய் சென்ற கேப்டன்.. உள்ளாட்சி தேர்தலில் உங்கள் குரல் கம்பீரமாக ஒலிக்கணும்.. தொண்டர்கள் வாழ்த்து
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குள் முழு உடல் நலத்துடன் பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டும் என தொண்டர்கள் வாழ்த்தியுள்ளனர்.
Recommended Video
தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு முழுமையான சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
விஜயகாந்த் பிறந்த நாள்..சொந்த காலில் அரசியலில் தடம் பதித்தவர்: அரசியல் எழுச்சியும்...தொடர் சரிவும்
குரல் உடைந்து உடல் தளர்ந்து
இந்த சிகிச்சைக்கு பிறகு அவரது குரல் உடைந்து உடல் தளர்ந்துவிட்டது. தைராய்டு பிரச்சனை, தொண்டையில் தொற்று மற்றும் சிறுநீரக பிரச்சனை ஆகிய பாதிப்பால் உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சென்னையில் 10 நாட்கள், பின்பு சிங்கப்பூர் சிகிச்சை, அமெரிக்கா என பல சிகிச்சைகளை மேற்கொண்டார்.
தேமுதிக தலைவர்
இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றார். லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் அவருக்கு நடைப்பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
துபாயில் சிகிச்சை
அந்த பரிசோதனையின் அடிப்படையில் அவர் துபாயில் இருந்து சிகிச்சை பெறுவதா? அல்லது லண்டன் சென்று பயிற்சி மேற்கொள்வதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் துபாய் சென்றனர்.
கொரோனா பரிசோதனை
முன்னதாக துபாய் செல்லும் நபர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை இருப்பதால் விஜயகாந்த் உட்பட அவருடன் துபாய் செல்லும் அனைவரும் பரிசோதனை எடுத்து கொண்டனர். கடந்த 25 ஆம் தேதி விஜயகாந்த் தனது 59 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
சினிமா பிரமுகர்கள்
அப்போது அவருக்கு தலைவர்கள், சினிமா பிரமுகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்துகளை பகிர்ந்தனர். அப்போது அவர் தொண்டர்களை கட்சி அலுவலகத்தில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நலம், கொரோனா பிரச்சினையை கருத்தில் கொண்டு அவர் தொண்டர்களை சந்திக்க இயலவில்லை.
சிகிச்சைக்கு வெளிநாடு
இதையடுத்து அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ போஸ்டை போட்டிருந்தார். அதில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், விரைவில் பூரண உடல்நலம் பெற்று அனைவரையும் சந்திப்பார் என்றும் பழைய கேப்டனாக திரும்பி வருவார் என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்திருந்தார். மேலும் அப்பாவை விரைவில் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தேமுதிக போட்டி
தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் தேமுதிக தனது இருப்பை காட்டிக் கொள்ள இதுதான் சமயம். இதை விட்டுவிட்டால் 2024 அல்லது 2026 வரை காத்திருக்க வேண்டும். தேமுதிக பழைய கட்சியாக கம்பீரமாகும் நாள் விஜயகாந்த் பழைய நிலைக்கு திரும்பினால் மட்டுமே முடியும். இதனால் தற்போது துபாய் சென்றுள்ள அவர் உள்ளாட்சி தேர்தலுக்குள் மீண்டும் நல்ல பூரண உடல்நிலையை பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.