இதை கவனிச்சிங்களா.. திமுக மாணவரணியின் போராட்டம் நடக்கும்போது.. நீட் தேர்வுக்கு எதிராக பேசிய விஜய்!
சென்னை: சென்னையில் இன்று நீட் தேர்வு எதிர்ப்பை வலியுறுத்தி திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் தவெக விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற அன்றே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்கள்.
நீட் தேர்வு என்பது, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடப்பிரிவுகளில் இருந்து 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். இப்படி இருக்கு, சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர். நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. எனவே இந்த தேர்வில், ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருந்தது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.
இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபிடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவ்வளவு மாணவர்கள் முதலிடம் பிடித்தது, எவ்வாறு சாத்தியமாகும் என்றால், வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளி வருவது, பணம் பெற்றுக் கொண்டு விடைகளை பகிர்வது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இத்தேர்வு முறையே மோசடி என்று உறுதி செய்கிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக இன்று திமுக மாணவரணியினர் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாணவர்களை சந்தித்த நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல மாணவர்களை அவர் சந்தித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தியுள்ளார்.
இந்த ஆண்டு இரண்டு நாட்களாக இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 28ம் தேதி நடைபெற்ற முதல் நாள் விழாவில் விஜய் பேசியிருந்த விஷயங்கள் கவனம் பெற்றிருந்தன. அதேபோல, இரண்டாவது நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் நீட் விலக்கை வலியுறுத்தியுள்ளார்.
"இந்த விழாவில் எதையும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த விஷயம் குறித்து பேசாவிட்டால் சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். நீட் தேர்வால் தமிழகத்தின் கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வை மூன்று பிரச்னைகளாக பார்க்கிறேன்.
முதலில் இந்த தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975க்கு முன்னாள் கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதன் பின்னர் ஒன்றிய அரசு கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்து. இதுதான் முதல் பிரச்னை. இரண்டாவதாக, ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே கல்வி என்பது கல்விக் கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. மாநிலங்களுக்கு ஏற்றார் போல பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இது மாநில உரிமை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, கல்வியின் விரிவான கண்ணோட்டம் சம்பந்தப்பட்டதும் கூட.
மாநில வழி கல்வியில் பயின்றுவிட்டு NCRT சிலபஸில் தேர்வு வைப்பது என்பது சரியா இருக்குமா? கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
மூன்றாவதாக, சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாக செய்திகள் வந்தன. இதனால் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் சுத்தமாக போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை என்பதைதான் இந்த செய்திகள் மூலமாக நாம் புரிந்துக்கொண்ட விஷயம்" என்று கூறியுள்ளார்.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் விஜய் பேசியிருப்பது, மாணவர்களின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications