கோவை அன்னப்பூர்ணா ஓட்டல் விவகாரம்.. களத்தில் இறங்குவோம்.. விக்கிரமராஜா அறிவிப்பு
சென்னை: கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவுப்பண்டங்களின் மீதான ஜி.எஸ்.டி வரி குறித்துபேசியிருந்தார். இந்த விவகாரம் அரசியலாக மாறிய நிலையில், பெரிய சர்ச்சையாகவும் உருவெடுத்தது. இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பாதிப்பு என்றால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு களத்தில் இறங்கும் என விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். தொழில் துறையினருக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் விவாதித்தார். . ஒவ்வொரு தொழில் முனைவோர் அமைப்புகளும் தங்கள் துறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர்.

பின்னர் தொழில்துறையினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகியது. எதிரக்கட்சியினர் பலர் இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்ததுடன் நிர்மலா சீதாராமனை விமர்சித்தனர்.
இந்த வீடியோ தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது பற்றி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "கோவை ஓட்டல் உரிமையாளர் தங்களுடைய பிரச்னையை ஜனரஞ்சகமாகப் பேசியிருந்தார். அதில் எந்த தவறும் இல்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், மாநிலங்களிலிருந்தும் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். எனவே ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களிடம் இந்த பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஜி.எஸ்.டி-யை பரம விரோதியாகப் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் ஆதாயமாக இருக்கும்.
ஊறுகாய் மாமியை இப்படி எல்லாம் கேட்டுவிட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று விமர்சனங்கள் சொல்லலாம். இந்த விமர்சனங்களைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஜி.எஸ்.டி வரியை மக்களுக்கு எந்த சுமையும் இல்லாமல், எளிமையாகக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில்தான் இறங்கியுள்ளோம்" இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதனிடையே கடுமையான விமர்சனங்கள் அதிகமான நிலையில், செப்டம்பர் 12ம் தேதி மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னப்பூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்தித்தார். இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா சீனிவாசன் மட்டும் இருந்தனர். அப்போது, "நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று எழுந்து நின்று கை கூப்பி கேட்டார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதால் மீண்டும் சர்ச்சை வெடித்தது. இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். அதன்பின்னர் அண்ணாப்பூர்ணா சார்பிலும் இத்துடன் இந்த விகாரத்தை முடித்துக்கொள்வதாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவுப்பண்டங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்குமொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாக பேசியிருந்தார்.
அவர் பேசிய தொனிமுறை மாறுபட்டிருக்கலாமே தவிர, கருத்து ஒன்றுதான். இதை யாரும் அரசியலாக்க கூடாது. இதனால் உணவக வணிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றாலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு களம் இறங்க தயங்காது. வணிகம் என்பது ஏதோ அடிமைத் தொழில் என யாரும் கருதிவிடக்கூடாது. வணிகர்களுக்கான அதிகாரத்தை வணிகர்கள் கையில் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications