விஜய் டிவியில் “ஜெய்பீம்” முழக்கம்.. அம்பேத்கருக்கு கடிதம் எழுதி பிக்பாஸில் சமூக நீதி பேசிய விக்ரமன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள விக்ரமன், அம்பேத்கருக்கு கடிதம் எழுதி வாசித்தது ஓளிபரப்பப்படாதது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று ஒரு மணி நேர எபிசோடில் விஜய் டிவி அதை ஒளிபரப்பி உள்ளது.
உலக புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 6 வது சீசன் தற்போது 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் வாரந்தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுகிறார். நடிகர்கள், நகைச்சுவை கலைஞர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள் என பலரும் பங்கேற்று உள்ளனர்.
அடுத்த கண்ணம்மாவாக பிக்பாஸ் நடிகை தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.. குவியும் கருத்துக்கள்
போட்டியாளர் விக்ரமன்
இந்த ஆண்டு பொழுதுபோக்கு துறையை சார்ந்த அரசியல் துறையிலிருந்து ஒருவர் பங்கேற்பதாக அறிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விக்ரமனை அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன். ஆரம்ப நாட்களில் அமைதியாக இருந்த விக்ரமன் தற்போது 75 நாட்களை கடந்தும் ரசிகர்களின் அன்பை பெற்று நிலைத்து இருக்கிறார்.
துணிச்சலான பேச்சு
தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாதங்களில் பேசி பிரபலமான விக்ரமன் ஏராளமான போராட்டக் களங்களிலும் பங்கெடுத்து உள்ளார். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த நோக்கத்திற்காக பங்கேற்க உள்ளே சென்றாரோ அவர் அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.
முற்போக்கு கருத்துக்கள்
சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் பதிவு செய்து வந்த விக்ரமன், அதையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் செய்து வருகிறார். பட்டியலின, பழங்குடியின மக்கள், பெண்கள், திருநங்கைகள் ஆதரவாக தொடர்ந்து அவர் பேசி வருகிறார். பிக்பாஸில் சக போட்டியாளர்கள் செய்யும் தவறுகளையும் தட்டிக்கேட்பவராக உள்ளார்.
மக்கள் ஆதரவு
பிற்போக்கான, பெண்கள் அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசினால் அதை வெளிப்படையாகவே கண்டித்து வந்தார். பிறரை அவமானப்படுத்தும் விதத்தில் பேசுபவர்களை கண்டிப்பதில் முதல் ஆளானாக உள்ளார் விக்ரமன். இதன் காரணமாக அவருக்கு வீட்டின் உள்ளே எதிர்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் மத்தியில் அவருக்கு பலத்த ஆதரவு உள்ளது.
கனா காணும் காலங்கள்
இந்த நிலையில் இந்த வாரம் கனா காணும் காலங்கள் என்ற வாராந்திர டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது. முதல் நாள் டாஸ்கில் ஆரம்ப பள்ளி தமிழ் ஆசிரியராக நடித்த விக்ரமன், ஆத்திச்சூடிக்கும் அறத்திற்கும் சிறப்பான விளக்கத்தை அளித்தார். உயர்நிலைப்பள்ளி டாஸ்கில் விக்ரமன் மாணவராகவும், நேற்று 80களில் வரும் கலைக்கல்லூரி டாஸ்கில் மீண்டும் ஆசிரியராக நடித்தார் விக்ரமன்.
விக்ரமன் எழுதிய கடிதம்
நேற்று முந்தினம் நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க் வழங்கப்பட்டது. சக போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி அதை படித்துக் காட்டினார்கள். ஆனால், விக்ரமன் கடிதம் எழுதியது ஒரு மணி நேர டிவி எபிசோடிலும், 24 மணி நேர நேரலையும் காட்டப்படாது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பலரும் ட்விட்டரில் விஜய் டிவியை விமர்சித்து வந்தனர்.
ஒளிபரப்பிய விஜய் டிவி
இந்த நிலையில் நேற்று 1 மணி நேரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் விக்ரமன் கடிதம் எழுதி வாசித்தது ஒளிபரப்பானது. அதில், "அன்புள்ள புரட்சியாளார் அம்பேத்கர் அவர்களுக்கு... ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மனிதர்களாய் தலைநிமிர செய்தவர் நீங்கள். GIVE BACK TO SOCIETY என்ற முழக்கத்துடன் கடின முயற்சியால் நீங்கள் வெளிநாடுகளுக்கு போய் படித்து கல்வி, அறிவு அனைத்தையும் சுயநலனுக்காக துளியும் பயன்படுத்திக்கொள்ளாமல் கேட்க நாதியில்லாத மக்களுக்கு உழைப்பதற்காக திரும்பி வந்தீர்கள்.
|
விக்ரமனின் ஜெய்பீம் முழக்கம்
நானும் ஒவ்வொரு முறை சோகமாக, தனிமையை உணரும்போது லண்டனில் நீங்கள் இருந்து தனிமையான நாட்கள், ஆதரவு இன்றி நீங்கள் தனியாக போராடிய நாட்கள், இந்த குரூரமான சமூகத்தில் கஷ்டப்பட்ட வலிகள், ரணங்கள் அதைதான் நினைத்துக்கொள்கிறேன். உங்கள் அளவிற்கு என்னால் உழைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்வேன். ஒரு 5 விழுக்காடு எட்டிப்பிடிக்க முயல்வேன். ஜெய்பீம்! நன்றி." என்று தான் எழுதியதை வாசித்துக் காட்டினார்.