சென்னை ஏர்போர்ட் 2.0! பரந்தூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்? ஸ்பாட்டிலிருந்து "ஒன்இந்தியா" ரிப்போர்ட்!
சென்னை : காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்பளித்துள்ள நிலையில், அதே நேரத்தில் ஒரு முக்கிய கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் ஒன்றாக திகழ்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தினம் தோறும் இயக்கப்படுகின்றது.
அடுத்து சில ஆண்டுகளில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் இட நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக திட்டம் தீட்டுப்பட்டு வந்தாலும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
2வது விமான நிலையம்
குறிப்பாக இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், படாளம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய நான்கு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்தது. அதில் பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் கூறியுள்ளார். . தற்போது அதிகாரப்பூர்வமாக பரந்தூர் அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலங்களை விற்பனை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

எதிர்ப்புகள் இல்லை
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புகள் எதுவும் பெரிய அளவில் இல்லை என்றாலும் அப்பகுதி மக்கள் ஒரு முக்கியமான கோரிக்கை ஒன்றினைகூறி வருகின்றனர். பொதுவாக பரந்தூர் என்பது அதிக விவசாய நிலங்களும் ஏரி குளங்கள் உள்ள பகுதியாகும். தற்போது அப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கும் நிலையில் விவசாயத்தை அழித்துவிட்டு விமான நிலையம் கொண்டு வருவதா எனவும் விவசாயம் பாதிக்கப்படாத வகையில் விமான நிலைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே ஒரு கோரிக்கை
அதே நேரத்தில் விமான நிலையம் அமைந்தால் அதனை சுற்றி நடக்கும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் காரணமாக இந்த திட்டத்தை வரவேற்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். பரந்தூரில் திமுக அதிமுக காங்கிரஸ் என கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் விமான நிலையம் வர வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். விமான நிலைய கட்டுமான பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக தனது சொந்த நிலங்கள் பறிபோனாலும் வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு காரணமாக அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வரவேற்பு
மேலும் விமான நிலையம் வரும்போது அது மட்டுமல்லாமல் அதனைச் சுற்றி பல்வேறு தொழில்கள் விரிவடையும். உணவகம் தங்குமிடம் தொழிற்சாலைகள் பெட்ரோல் பங்குகள் என அடுத்தடுத்து வளர்ச்சிகள் ஏற்படுவதால் வருங்கால சந்ததியினருக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என கூறும் அப்பகுதி மக்கள் அதே நேரத்தில் விவசாயத்தை பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் அதே ஊரைச் சேர்ந்த கணபதி. ஆண்டாண்டு காலமாக விவசாயத்தை நம்பியே பரந்தூர் மக்கள் இருக்கும் நிலையில் தற்போதைய தலைமுறைதான் பட்டப் படிப்புகள் படித்து வருகின்றனர்.

இளைஞர்கள் உற்சாகம்
இந்த விமான நிலையம் அமைவதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இதனை உளப்பூர்வமாக வரவேற்கிறோம் எனவும் கூறுகின்றனர். கிராமத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது விமான நிலையத்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் பரந்தூர் இரண்டாவது விமான நிலைய திட்டத்தினை வரவேற்பதாக கூறுகின்றனர் அப்பகுதி இளைஞர்கள்.












Click it and Unblock the Notifications