கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் உள்ளன.. அதிர்ச்சியாகிவிட்டேன்.. ஆளுநர் ரவி பரபர பதிவு
சென்னை: கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர் என் ரவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. ஆளும் திமுக குறித்தும் அதன் கொள்கைகள் குறித்து ஆளுநர் ஆர் என் ரவி விமர்சித்து வருகிறார். இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுபோக ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவ்வாறாக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தான் கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாதாக ஆளுநர் ரவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நாகை வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஆளுநர் ரவி அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் வருகை தந்தார்.

மீன்வர்களுடன் கலந்துரையாடல்: திருவாரூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.10 மணி அளவில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லம் சென்றார். கீழ்வெண்மணியில் கடந்த 1968-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த தியாகி பழனிவேலை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா பேராலயம் சென்று பிரார்த்தனை செய்தார்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். அதன்பிறகு நாகை அருகே பெருங்கடம்பனூர் கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகை அருகே பெரவாச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வறுமை நிலையில் இருக்கிறார்கள்: இந்த நிலையில், தனது நாகை மாவட்ட பயணம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி தனது அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான திரு.ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன்.
கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications