உயிர்களைக் காவுவாங்கும் கட்சி பேனர்கள்.. நெஞ்சை அதிர வைக்கிறது.. கமல்ஹாசன் கொதிப்பு!
சென்னை: கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் கடந்த 20ம் தேதி பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பொன்முடியும் பல்வேறு திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் திமுகவினரை வரவேற்பதற்காக சாலை ஓரங்களில் உயரமான கொடி கம்பங்கள் நடப்பட்டன. இந்த அலங்கார பணியில் ஈடுபட்டு வந்த 13 வயதான சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

சாலை ஓரத்தில் தினேஷ் கொடியை நடும் போது மேலே சென்ற மின்சார வயரில் கொடி கம்பம் சிக்கி தினேஷ் உடலில் மின்சாரம் தாக்கி பலியானார். உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் தூக்கியடிக்கப்பட்ட தினேஷ் உடலில் காயம்பட்டு பலியானார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் தினேஷ் மரணத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட்டில், கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும், என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தினேஷ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், விழுப்புரத்தில் கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் பலியானது அதிர்ச்சியை தருகிறது, தினேஷை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று துணைநிற்கிறேன். உயிரை குடிக்கும் பேனர் கலாச்சாரத்தை உடனே நிறுத்துங்கள். இனி யாரும் பேனர் கலாச்சாரத்தால் மரணிக்க கூடாது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications