இன்னொரு விக்கெட்! “யாரும் கேள்வி கேட்கக்கூடாது”.. சீமான் பேச்சால் மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இஷ்டத்துக்கு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளையும் சிறப்பாக செய்தேன். 2016 இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019 இல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் ஆகவும், 2021ல் விழுப்புரம் தெற்கு மாட்ட தலைவர் ஆகவும், 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம்.

எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டம் கிடையாது: இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல், இரண்டு இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். இதில் உள்ளாட்சி தேர்தலைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டத்தையோ எங்கள் தொகுதியையோ சார்ந்தவர் கிடையாது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75% வேட்பாளர்களை நிரப்பினோம்.
கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு நிரப்பி அண்ணனிடம் கையொப்பம் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த எவையும் அவர் பொருட்படுத்தும்படி இல்லை.
நான் செய்வதைத்தான் செய்வேன்: இது அனைத்து பொறுப்பாளருக்கும் அண்ணன் கூறியது: இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக் கூடாது. என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள்.. இல்லாவிட்டால் கிளம்புங்கள். உங்களை யாரும் போஸ்டர் ஓட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார். பலமுறை பேசியும் நான் செய்வதைத் தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறினார்.
அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்: மேலும், 2026 தேர்தலுக்கு இப்போதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன? அண்ணா, நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம், இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications