விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் விழா கொண்டாடுவது உயிருக்கு உலை வைத்துவிடும்- அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: பொது மக்கள் பொது இடங்களில் விழாக்களை கொண்டாடுவது தன் உயிருக்கு உலை வைத்துக் கொள்ளும் செயல் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்பது திமுகவின் கொள்கை என்றும் ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறக்கூடாது என்பது பாஜக கொள்கை என்றும் அவர் விமர்சித்தார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து விட்டு சென்னை வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
அப்போது பேசிய அவர்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பத்துக்கும் மேற்பட்டவற்றை கோரிக்கைகளாக முன் வைத்தோம்.தடுப்பூசி அளவை அதிகப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது பயனுள்ளதாக அமைந்ததும் என்றார்.

நீட் தேர்வில் விலக்கு
திமுக அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு கட்டாயம் விலக்கு பெறும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கால தாமதம் ஏற்படுகிறது அவ்வளவுதான். திமுகவின் கொள்கை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதுதான். தற்போதைய கூட்டத்தொடர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில் நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற வேண்டும் என்பதே நோக்கம் என்பதால் தற்போது நடக்கும் கூட்டத்தொடரில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

பாஜக விருப்பம்
தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது திமுக தேர்தல் அறிக்கையின் கொள்கை. ஆனால் பாஜக தலைமையின் கொள்கை என்பது தமிழகத்தில் நீட் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது.

பொது இடங்களில் விழா
பொது மக்கள் பொது இடங்களில் விழாக்களை கொண்டாடுவது தன் உயிருக்கு உலை வைத்துக் கொள்ளும் செயல். எனவே, பொது இடங்களில் மக்கள் கூடி விழாக்களை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக வலியுறுத்தல்
தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கோரிக்கையாக இருக்கிறது. தடை தொடர்ந்தால் அதை மீறி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு ஒரு பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications