“நாயகன் மீண்டும் வரான்..” ஹேட்டர்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்த கோலி! இறுதியில் சொன்ன மாஸ் மெசேஜ்
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து இருந்தாலும் விராட் கோலி ஆசிய கோப்பையில் தனது பழைய ஃபார்முக்கு திரும்பி அனுபவப்பூர்வமான அசத்தல் ஆட்டத்தை ஆடி இருப்பது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தவர்.
அதே ஃபார்முடன் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் எண்ட்ரி கொடுத்த கோலி என்ற ரன் மெஷின் இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் அதில் ஹீரோ கோலிதான்.

தோனியின் நம்பிக்கை
கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக இருந்தவர்களில் தலைசிறந்தவர் என கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனியே முதலில் நம்பியது கோலியைதான். ஒரு கட்டத்தில் தான் ஃபார்மில் இருக்கும்போதே கோலிக்கு கேப்டன் பதவியை வழங்கிவிட்டு சாதாரண வீரராக ஆடி வந்தார். தொடக்கத்தில் மைதானத்தில் ஆக்கிரோஷமாக நடந்துகொண்டதால் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் சிலரின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

சாதனைகள்
ஆனால், அவரது கிரிக்கெட் எண்களை யாராலும் குறை சொல்ல முடியாது என்ற அளவுக்கு ஒவ்வொரு போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருந்தார் கோலி. சச்சின், ரிக்கி பாண்டிங், லாரா, தோனி, கங்குலி என பல முன்னணி வீரர்கள் படைத்த சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டிருந்தார் விராட் கோலி. விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அனைத்து சாதனைகளையும் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது

எல்லை மீறிய விமர்சனங்கள்
அவரது தலைமையின் கீழ் இந்தியா அதிக போட்டிகளையும் தொடர்களையும் தொடர்ந்து வென்று முன்னேறியது. இன்று வரை அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட இந்திய கேப்டன் கோலிதான். ஆனால், தோனியை போல் ஐசிசி கோப்பைகளையும், பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதை வைத்து கோலியை ராசியில்லாதவர், கேப்டனுக்கு தகுதி இல்லாவர் என்ற விமர்சனங்கள் தொடங்கி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, அவரது குழந்தை வரை விமர்சனங்களை முன்வைத்தார்கள் கிரிக்கெட்டே தெரியாமல் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்.

சதத்தில் வறட்சி
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அறையிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்ததால் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. தொடர்ந்து சதங்களை வாரிக்குவித்து வந்த கோலி கடந்த 3 ஆண்டுகளாக சதம் விளாசவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்து அவர் மீது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் அவர் ஃபார்மில் இல்லை என்று விமர்சித்தனர். ஆனால், கோலி அரைசதம், 60, 70 என்று ரன்களை குவித்துக்கொண்டுதான் இருந்தார்.

அசத்தல் ஆட்டம்
தொடர் அழுத்தங்களின் காரணமாக 3 விதமான கிரிக்கெட் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் விலகிய அவர், அடுத்தடுத்த சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த அவரை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்று விமர்சித்தார்கள் எதிர்ப்பாளர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும். ஆனால் இதற்கெல்லாம் தக்க பதிலடியை இந்த ஆசிய கோப்பை தொடரில் அளித்து இருக்கிறார் விராட் கோலி. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 35, ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 59, பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 60 என பழைய ஃபாருமுக்கு மீண்டும் வந்து நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என பேட்டால் மிரட்டி இருக்கிறார்.

விமர்சகர்களை நோக்கி
நேற்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளித்தாலும், கோலி பழைய ஃபார்முக்கு திரும்பியதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, "எனக்கு அறிவுரை சொல்ல விரும்புபவர்கள், நேருக்கு நேராக வந்து சொல்லுங்கள்." என்று விமர்சகர்களுக்கு மறைமுகமான பதிலடியை கொடுத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications