வீட்டை விட்டு கூட வெளியே வர முடியல! மெட்ரோவால் மிதக்கும் சென்னை! சசிகலாவின் முக்கிய கோரிக்கை!
சென்னை: சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மெட்ரோ பணிகளையும் தமிழக அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறுகின்ற மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகளாலும், மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம், மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் என்று அனைவராலும் பார்க்க முடிகிறது. ஒவ்வொருநாளும் சென்னை வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்ப வருவதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது.
பாலியல் சீண்டல்.. பாஜக நிர்வாகி மீது சசிகலா புஷ்பா மாஜி கணவர் தூத்துக்குடி போலீசில் புகார்
பொதுமக்களுக்கு சிரமம்
வேலைக்கு செல்வோர், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவச்செல்வங்கள், அவசரமாக மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், முதியவர்கள் போன்றோர் அன்றாடம் படும் சிரமங்களுக்கு அளவே இல்லை என்ற நிலை மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் குறிப்பாக, மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று வர அரசு பேருந்துகளை நம்பி கால் கடுக்க வெகுநேரம் காத்திருந்து சென்று வருவதற்குள் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளதாக வேதனைப் படுகிறார்கள்.
சாலையோர வீடுகள்
அதிலும் பேருந்துகள் செல்ல முடியாத சாலைகளில் வேலை நடைபெறும் இடங்களில் வசிப்பவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். அதேபோன்று சாலை ஓரம் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் நிலைமையோ பரிதாபகரமாக இருக்கிறது. வீட்டு வாசலிலேயே வெட்டி வைத்துள்ள பெரிய பள்ளத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பற்ற முறையில் தினமும் தாண்டி செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. மேலும் சிறு கடைக்காரர்களும் வியாபாரம் இன்றி வாழ்க்கையை நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மெத்தனமாக பணிகள்
இந்த பணிகள் என்றைக்கு முடியுமோ என்று பொதுமக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில இடங்களில் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். இது போன்று பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெறுவதை பார்க்கும்போது தமிழக அரசுக்கு முறையான திட்டமிடல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதுபோல் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பும், எந்த வித ஒத்துழைப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது.
போர்க்கால நடவடிக்கை தேவை
நடைபெறுகின்ற கட்டுமான பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, காலதாமதமின்றி விரைவாக பணிகளை முடிக்க இந்த அரசுக்கு எதாவது செயல்திட்டம் இருக்கிறதா? என்றும் தெரியவில்லை. விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளம் வெட்டி வைத்து இருப்பதால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
ஒப்பந்ததாரர்கள் இரவு பகல் என்று தொடர்ந்து 24 மணிநேரமும் பணிகளை மேற்கொண்டால்தான் விரைந்து முடிக்க முடியும். அவ்வாறு செய்யவில்லை என்றால் வரும் மழைக்காலத்தில் சென்னை மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் பேருந்துகள் இயக்க முடியாத இடங்களுக்கு சிற்றுந்துகளை ஏற்பாடு செய்து தர வேண்டும். அதேபோன்று, கட்டுமான பணிகள் நடைபெறுகின்ற இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு போதிய மாற்று வழிகளை ஏற்படுத்தி உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். ஒரு மணிநேரம் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கின்ற சூழலில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நடைபெறுகின்ற கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க திமுக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் சசிகலா அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.