பாஜகவுக்கு ஆட்சியில் பங்கா.. அதிமுக ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. நேராக பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
திருவாரூர்: பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒன்றாக இணைந்து கூட்டணியை அறிவித்தனர். ஆனால் கூட்டணி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அமித்ஷா, கூட்டணி ஆட்சி என்று சொல்லி வருகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது. அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து வருகிறார். இதனால் அதிமுக - பாஜக இடையில் கூட்டணியில் சில சிக்கல் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் தொடங்கிவிட்டன.
இதனிடையே தமிழகபாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதை 3 முறை தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்? அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தார். இதனால் பாஜகவினர் ஒட்டுமொத்தமாக கூட்டணி ஆட்சி என்று பேச தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியுள்ள கருத்துகள் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. திருவாரூரில் மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்ன திடீரென பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டீர்கள்.. அவர்களுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றீர்கள்..
திடீரென கூட்டணி வைத்துவிட்டீர்களே என்றார்.. எனக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டது. இது என்ன முதல்வர் இப்படி கேட்கிறார் என்று.. அதற்கு நான், இது எங்க கட்சி.. அதிமுக யாருடனும் கூட்டணி வைக்கும்.. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.. நீங்கள் ஏன் கதறுகிறீர்கள் என்று கேட்டதும் அப்படியே அமர்ந்துவிட்டார்.. அவருக்கு பயம் வந்துவிட்டது.
பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கிறது அதிமுக என்று பேசி வருகிறார்கள்.. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம்.. கூட்டணி பற்றி கவலை இல்லை.. உங்களை போல் வாரிசை ஆட்சியில் அமர வைப்பதற்காக துடிக்கவில்லை.
மக்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். எங்களுக்கு திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அப்படி ஒத்த கருத்துள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. திமுக ஒரு ஊழல் கட்சி என்று பாஜகவும் கருதுகிறது. அந்த எண்ணத்தில் தான் பாஜக எங்களுடன் இணைந்திருக்கிறது. இன்னும் சில கட்சிகள் சரியான நேரத்தில் எங்களுடன் இணையவிருக்கிறது. சரியான நேரத்தில் வருவார்கள். உங்களுக்கு பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications