நாங்கள் வீரர்கள்.. தெருச் சண்டையில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க மாட்டோம் - திருச்சி சிவா பரபர பேச்சு!
சென்னை : "நாங்கள் வீரர்கள். எல்லையில் நின்று மக்களை காப்போம். தெருச் சண்டையில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க மாட்டோம்" என திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், எம்.பிகள் பேச்சுகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடி வரவேண்டிய நிலை உள்ளது. நமக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
அதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள திமுக எம்பி திருச்சி சிவா, முதலமைச்சர் ஸ்டாலின் தந்துள்ள அறிக்கை, அண்ணா வழியில் கொடுத்திருப்பது, அதைப் பின்பற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா பேச்சு
சென்னை சூளையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ திருவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, "வரலாறும் வரலாற்றுச் சின்னங்களும் நம்மிடையே இருப்பதைப் பலரும் அறியாமல் உள்ளனர். அதேபோல தான் நம்மிடையே வாழும் தலைவர்களின் பெருமைகளை வெளி உலகுக்கு யாரும் சுமந்து செல்லாத தவறை தமிழன் தொடர்ந்து செய்து வருகிறான்.

தெற்கின் தலைவர்கள்
விடுதலை போராட்டக் காலத்தில் தமிழ்நாட்டில் போராடிய தலைவர்களுக்கு வடக்கில் எந்த அங்கீகாரமும் இல்லை. ஆனால் வடக்கே இருந்தவர்களுக்கு தெற்கில் அனைத்து மரியாதையும் உள்ளது. இங்கு வடநாட்டு தலைவர்களின் பெயரில் தெருக்கள், சாலைகள் உள்ளன. ஆனால் நமது தலைவர்கள் பெயரில் வட மாநிலங்களில் தெருக்கள், சாலைகள் இல்லை. இதற்கு காரணம் நம்முடைய தலைவர்களின் பெருமைகளை நாமே முழுமையாக அறிந்திருக்கவில்லை. பல தலைவர்கள் விடுதலைக்காக போராடினார்கள்.

ஒரே தலைவர்
ஆனால் சமூக விடுதலைக்காகவும் போராடிய ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டும் தான். நமக்கு இன்று கல்விக் கிடைக்க காரணம் பெரியார் தான். பக்கத்தில் இருப்பவர் இன்ன சாதி என்று தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் பெரியார். பெரியார் உணர்த்திய உரிமைகளை, அரசியல் ரீதியான, சட்ட ரீதியான அதிகாரத்தை பெற்றால் மட்டுமே பெற முடியும் என்று உணர்ந்தவர் அறிஞர் அண்ணா.

இனி ஒருவர் பிறக்கப்போவது இல்லை
மக்கள் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை திருமணத்தை, சட்டமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றியவர், தி.மு.கவை தொடங்கி ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்த அண்ணா. எல்லோரும் ஒரே குலம்; எல்லோருக்கும் எல்லாம் என்றார் அண்ணா. அவர் வழியில் தான், எங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் உழைக்கிறோம். அண்ணா போன்ற அரசியல் தலைவர் இனி உலகில் ஒருபோதும் பிறக்கப்போவது இல்லை. அதனால் தான் அவரது மறைவின்போது உலகமே வியக்கும் வகையில் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மாற்றிக் காட்டியவர் கருணாநிதி
சென்னையில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்கியது தி.மு.க ஆட்சி தான். ஆனால் இந்தியாவின் தொழில் நகரமான மும்பையில் இன்றும் குடிசைகள் இருக்கிறது. ஆனால் சென்னையில் அந்த நிலையை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றியவர் கருணாநிதி. ஏழையும் மாடி வீட்டில் குடியேறலாம் என்று மாற்றிக் காட்டிய இயக்கம் திமுக. அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற எளிமையான தலைவர்களை எங்குமே பார்க்க முடியாது.

நாங்கள் வீரர்கள்
ஒருவன் உயர வேண்டும் என்றால் அவனுக்கு கல்வி வேண்டும். அதை உணர்ந்து தான் இந்த இயக்கம் அனைவருக்கும் கல்வியை பெற்றுத் தந்தது. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சமமான மரியாதை என்பதை நடைமுறைப்படுத்திய இயக்கம் திமுக. இன்று முதலமைச்சர் தந்துள்ள அறிக்கை, அண்ணா வழியில் கொடுத்திருப்பது. நாங்கள் வீரர்கள். எல்லையில் நின்று மக்களை காப்போம். தெருச் சண்டையில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க மாட்டோம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications