'எந்த கொரோனா அலை வந்தாலும்..தடுப்பூசியால் தடுத்துவிடலாம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: ஸ்டீல்த் ஒமிக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். இதையடுத்து பல நாடுகளுக்கும் கொரோனா பரவியது.
கொரோனாவால் உலகம் முழுவதும் லாக்டவுனில் சென்றது. கொரோனாவால் உலகில் 46 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கொரோனா 4வது அலை வருமா, வராதா? வேலூர் சிஎம்சி முன்னாள் பேராசிரியர் கணிப்பு இதுதான்!
ஒமிக்ரான்
கடந்த ஆண்டு இறுதியில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. அதன்பிறகு மிக வேகமாக ஒமிக்ரான் பரவல் அதிகரித்தது. ஒமிக்ரானால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், மூன்றாவது அலையில் பல பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் வேகமாக இருந்தது. இந்நிலையில் ஒமிக்ரானின் வேரியண்ட் தற்போது பரவி வருகிறது.
ஸ்டீல்த் ஒமிக்ரான்
ஒமிக்ரான் வைரசின் வேரியண்டை BA.2 என்ற ஸ்டீல்த் வைரஸ், ஒமிக்ரானுக்கு மாற்றாக அதிக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், இதுவரை உலக சுகாதார அமைப்பு இதனை 'வேரியன்ட் ஆஃப் கன்சர்ன்' எனப்படும் கவலை கொள்ளத்தக்க வேரியண்ட்டாக அறிவிக்கவில்லை. டென்மார்க்கில், இப்போதைக்கு BA.2 என்ற ஸ்டெல்த் ஒமிக்ரான் தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
4வது அலை
கொரோனா நான்காவது அலை ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். நான்காவது அலை வரும் என ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது. பல இடங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு நூறுக்கும் கீழ் இருக்கிறது. கொரோனா மரணங்களும் குறைந்திருக்கின்றன. ஆனால் அண்டை மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மா.சுப்ரமணியன்
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எந்த அலையிலும் தடுப்பூசியால் நாம் தற்காத்துக்கொள்ளலாம். அரசு அறிவித்த தளர்வுகளை அலட்சியமாக கடக்க வேண்டாம். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஸ்டீல்த் ஒமிக்ரான் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி குறைவாக பதிவான இடங்களில் தடுப்பூசி போடும் பணி அதிகரிக்கப்படும்'' என்றார்.