“வைகோவையே நாங்க தூக்கி எறிஞ்சோம்.. யார் வந்தாலும் போனாலும் கவலையில்லை” - ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
சென்னை: திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பா.ஜ.கவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, யார் வந்தாலும் போனாலும் கவலை இல்லை எனத் தெரித்துள்ளார்.
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம் எனக் கூறியுள்ளார்.
மொத்த திமுக பாஜகவுக்கு வரும்! கனிமொழியின் போன்! உதயநிதிக்கு 'ப்ராண்டிங்’! மனம் திறந்த சூர்யா சிவா..!
திருச்சி சிவா மகன்
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த பா.ஜ.கவில் இணைந்த சூர்யா சிவா, தி.மு.க எனும் கட்சி ஒரே குடும்பத்தின் பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.கவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் திருச்சி சிவா எம்.பியின் மகன் திடீரென பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.க தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆர்.எஸ்.பாரதி
இந்நிலையில், எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனின் தந்தையின் திருவுருவ படம் திறப்பு நிகழ்வு திருநின்றவூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
வைகோவையே தூக்கி எறிந்தோம்
திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். தி.மு.க தேம்ஸ் நதி போல, யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை. தேம்ஸ் நதி போன்று 70 ஆண்டுகள் கடந்து தி.மு.க போய் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் போகும் எனப் பதிலளித்தார்.
தருமபுரம் ஆதீனம்
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி தொடர்பாக தொடர் சர்ச்சைகள் நிகழ்ந்துவந்த நிலையில், பட்டின பிரவேசத்திற்கு அனுமதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தது குறித்த கேள்விக்கு, எது நியாயமோ, எது நாட்டுக்கு ஏற்றதோ, எதை சமுதாயம் ஏற்குமோ அதை தான் முதல்வர் செய்துள்ளார் என்று ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.