தொடரும் மாண்டஸ் ‛எபேக்ட்’.. சென்னை உள்பட தமிழக மாவட்டங்களை சுத்துப்போடும் மழை.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: மாண்டஸ் புயல் தமிழகத்தில் கரையை கடந்த நிலையில் அதன் தாக்கம் இன்னும் உள்ளது. இந்நிலையில் தான் மாண்டஸ் வலுவிழந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை கொட்டப்போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் மாவட்டங்களில் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. முதல் 2 வாரங்கள் இந்த மழை சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது.
அதன்பிறகு சிறிது ஓய்வெடுத்த மழை, கடந்த ஒரு வாரமாக பெய்ய தொடங்கியது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கரையை கடந்த புயல்
அதன்படி வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானது. இதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்தாலும் கூட அதன் தாக்கம் என்பது இன்னும் தொடர்ந்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயில் இன்றி இதமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.

வெதர்மேன் அப்டேட்
அதன்படி நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சென்னையில் 2 நாள் மழை
வலுவிழந்த மாண்டஸ் புயல் தற்போது குறைந்த காற்றழுத்த நிலையாக மாறி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் அதிக மழை பெய்யும். இதற்கான விளைவை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அடுத்த 2 நாட்கள் முழுவதுமாக பெறும். மேலும் மேற்கு திசை காற்றால் தமிழகத்தின் தூத்துக்குடியில் வறண்ட வானிலை நிலவும்.

உள்மாவட்டங்களில் மழை
மேலும் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும். குறிப்பாக கேரளாவில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும். தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் அதையொட்டி வடக்கு உள்மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications