தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் பலத்த மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் தொடங்கி தற்போது வரை தமிழகத்தில் பலமுறை வடகிழக்கு பருவமழை தீவிரமாக கொட்டியிருக்கிறது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் அதிகமான மழைப்பொழிவு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உள் மாவட்டங்களில்
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் மழை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் 13 செமீ மழையும், மயிலாடுதுறையில் 6 செமீ மழையும், சீர்காழியில் 5 செமீ மழையும், திருவிடைமருதூரில் 4 செமீ மழையும் நன்னிலத்தில் 3 செமீ மழையும், கும்பகோணத்தில் 2 செமீ மழையும் வலங்கைமான், கடலூர், மரக்காணம் அரியலூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1 செமீ மழையும் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications