4 நாட்களுக்கு செம மழை.. பனி வருது மழை வராதுனு மூடநம்பிக்கையை தூக்கி போடுங்க.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கிழக்கு காற்றால் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், கிழக்கு காற்றால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும். பொதுவாக உள்மாவட்டங்களில் மதியம் முதல் இரவு நேரத்தில் மழை பெய்யும்.
அது போல் கடலோர மாவட்டங்களில் இரவு முதல் காலை நேரங்களில் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு கோவை- திருப்பூர்- ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்யும். இன்று முதல் நாளை காலை வரை டெல்டா முதல் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும்.
நடுவானில் சக்கரம்! புயலாகிறதா? வானிலையில் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தந்த 4 முக்கிய வார்னிங்
எந்த மாவட்டங்கள்
குறிப்பாக எந்த மாவட்டங்கள் என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் மழை பரவலாக பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு திடீர் மழை பெய்யும். குறிப்பாக சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நல்ல மழை பெய்யும்.
காற்று குவிதல்
காற்று குவிதலின் முனையில் இந்த மாவட்டங்கள் உள்ளதால் நல்ல மழை பெய்யும். பனி வந்துவிட்டதால் மழை வராது எனும் மூடநம்பிக்கையை தூக்கி போடுங்கள். தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு பெய்யும் மழையை ரசியுங்கள். இந்த மழை முடிந்தவுடன் சக்கரம் (காற்றழுத்தம்) குறித்து பொறுமையாக டிராக் செய்யலாம். எனவே 4 நாட்களுக்கு குடையுடன் வெளியே போங்க. திடீர் திடீர்னு குறுகிய நேரத்தில் மழை பெய்யலாம்.
டிசம்பர் மாதம் 2ஆவது வாரம்
டிசம்பர் 2ஆவது வாரத்தில் காற்றழுத்தமானது நம் தமிழகத்தை நோக்கி வருகிறது. ஆனால் இந்த காற்றழுத்தம் மழையை தருமா இல்லை காற்றை மட்டும் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கெனவே ஒரு சிஸ்டம் பூட்ட கேஸாகிவிட்டது. எனவே அது போல் எல்லா காற்றழுத்தங்களும் மழையை தராது என சொல்ல முடியாது.
டிசம்பர் மாதம்
டிசம்பர் மாதத்தில் எப்போதும் பனி இருக்கும். வர்தா புயல் உருவாகும் சில நாட்களுக்கு முன்பு கூட பனி இருந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை இல்லாத நேரத்தில் பனி பெய்வது எல்லாம் இயல்பான ஒன்றுதன். இந்த காற்றழுத்தத்திற்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அதுகுறித்து தெளிவான பார்வையை பிறகு பார்க்கலாம்.
2 முதல் 3 ஆவது வாரங்களில் நல்ல மழை
எம்ஜேஓ நம் கடல் பக்கம் வந்துள்ளது. இது கேம் சேஞ்சராக மாறும். எனவே வரும் 2 முதல் 3 ஆவது வாரங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த மாதம் 1ஆம்தேதி முதல் 5 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தமும் ஆட்டம் காண்பித்து விட்டு போய்விட்டது. இந்த நிலையில் வரும் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தமாவது தீவிரமடைந்து புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.