மியூசிக் சேர் ஆட்டம்! சீனியர்ஸை எல்லாம் ஒதுக்கி.. எடப்பாடி தரும் அதிர்ச்சி வைத்தியம்! மொத்தமா போச்சா
சென்னை: ஜூன் 23ம் தேதி நடக்க உள்ள அதிமுக கூட்டத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு நிர்வாகி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பதவியை பெற சில மூத்த தலைகள் முண்டியடித்துக்கொண்டு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதில் அவை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக உறவில் விரிசல் இல்லை! தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி பேசிட்டாங்க - எடப்பாடி பழனிசாமி
பல விஷயங்கள்
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து அதிமுக தலைகள் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் ஒற்றை தலைமையை தேர்வு செய்வது பற்றி இப்போது முடிவு எடுக்கப்படாது. ஆனால் அதற்கான அச்சாரம் இதில் போடப்படும் என்று கூறுகிறார்கள். அதோடு அதிமுக பாஜக இடையிலான உறவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மோதல்கள் நிலவி வருகின்றன. அதிலும் சமீபத்தில்அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அதிமுக - பாஜக உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது.
மோதல் பற்றி விவாதம்
இந்த கூட்டணி மோதல் குறித்தும் விவாதிக்கப்படும். பாஜக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்பது பற்றி ஆலோசனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதெல்லாம் போக முக்கியமான விஷயம் என்றால் அது அவைத்தலைவர் தொடர்பானதுதான் என்கிறார்கள் அதிமுக தரப்பினர். அதிமுகவிற்கான முழு நேர அவைத்தலைவரை தேர்வு செய்ய இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கவிருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழ் மகன் உசைன் தற்காலிக அவைத்தலைவர்தான்.
சீனியர்கள் முயற்சி
அவைத்தலைவர் பதவியை கைப்பற்ற சீனியர்கள் பலரும் வரிந்து கட்டுகிறார்கள். யாருக்கு வாய்ப்பளிப்பது என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கவலையடைந்திருக்கிறார்கள். காரணம், யாருக்கு கொடுத்தாலும் மற்றவர்களின் அதிருப்தியை சரி செய்ய முடியாது என்பதுதானாம். இது குறித்து 2 முறை பன்னீரும் எடப்பாடியும் விவாதித்தும், பிரச்சனையில்லாமல் ஒருவரை டிக் அடிக்க அவர்களால் முடியவில்லை. இதனால் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழ் மகன் உசேன்
இந்த நிலையில், தற்காலிக அவைத்தலைவராக இருக்கும் தமிழ் மகன் உசேனையே முழு நேர அவைத்தலைவராக நியமித்து விடலாம் ; முஸ்லீம் பிரதிநிதித்துவம் தந்த மாதிரி இருக்கும் ; அவரை எடுத்து விட்டு முஸ்லீம் அல்லாத வேறு ஒருவருக்கு வாய்ப்புத் தந்தால் அதிமுகவில் உள்ள முஸ்லீம்கள் அதிருப்தியடைவார்கள் என்று எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பு கருதுகிறதாம். சீனியர்களில் அனைவரும் ஒப்புக்கொள்கிற வகையில் ஒருவரை தேர்வு செய்ய இயலாத நிலை கட்சியில் நீடித்து வருகிறது.
எடப்பாடிக்கு போன ஆலோசனை
அதனால் தமிழ் மகன் உசேனே அவைத்தலைவராக இருக்கலாம் என்று எடப்பாடிக்கு யோசனை தெரிவித்திருக்கிறாராம் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி. எனவே அதிமுக கூட்டத்தில் இதற்கான அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்படலாம். ஆனால் இந்த முடிவு எடுக்கப்பட்டால் எம்பி தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்காமல், இப்போது அவை தலைவர் பதவிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் மூத்த நிர்வாகிகள் சிலர் தங்கள் கனவு கலைந்ததால் அப்செட் ஆவார்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இரட்டை தலைமை.. மூத்த நிர்வாகிகளுக்கு கொடுக்க போகும் அதிர்ச்சி வைத்தியமாக இது இருக்கும் என்கிறார்கள்.