ஒரே நாளில் எடப்பாடிக்கு காத்திருக்கும் 2 சவால்கள்.. உள்ளே புகுந்த சசிகலா.. சமாளிப்பாரா ஈபிஎஸ்?
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இரட்டை சவால்களை எதிர்கொள்கிறார் ஈபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, கட்சியைக் கைப்பற்றி இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் வரிசைகட்டி நிற்கின்றன.
சசிகலாவும் தற்போது கோதாவில் குதித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ள வழக்கும் ஆகஸ்ட் 2ல் விசாரணைக்கு வர உள்ளது.

எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி தனக்கு குடைச்சல் கொடுத்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை மொத்தமாக கட்டம் கட்டி கூண்டோடு தூக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை எல்லா பொறுப்புகளுக்கும் நியமித்து வருகிறார். கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள ஈபிஎஸ்ஸுக்கு, கட்சி அலுவலகமும் கை மேல் கிடைத்துள்ளது. பொதுக்குழு தொடர்பான வழக்குகளில் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்புகள் வந்ததால் தான் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கு
ஆனால், இனி வரவிருக்கும் வழக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் வெற்றிகளைத் தராது என்கிறார்கள் எதிர் தரப்பினர். ரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அளித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறங்கிய சசிகலா
இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்த என்னை கட்சியில் இருந்து நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது. கீழ் நீதிமன்றம் முழுமையாக விசாரணை நடத்தவில்லை. எனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்கவில்லை. எனது வழக்கை நிராகரித்தது தவறு. உரிமையியல் வழக்கை ஆரம்பநிலையிலேயே நிராகரிக்க முடியாது எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலாமேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பொதுச் செயலாளர்
அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பிறகு, அந்தப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற நிலையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
Recommended Video

ஆகஸ்ட் 2
அதனை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 4-வது சிவில் கோர்ட்டு நீதிபதி சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத்தான் சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு துணையாக
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்த கருத்து வெளிப்படும் போதெல்லாம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசி எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன் என்று தான் ஓ.பி.எஸ் கூறி வந்தார். சசிகலாவை கடுமையாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் சசிகலா எடப்பாடி பழனிசாமியையே கடுமையாக தாக்கி வருகிறார். இதன் மூலம் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் ஓரணியில் திரளும் சூழலும் உருவாகியுள்ளது.

ஒரே நாளில்
எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தொடர்பான வழக்கும், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கும் ஒரே நாளில் விசாரணைக்கு வரவிருக்கிறது. 2 நீதிமன்றங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா அல்லது ஈபிஎஸ் சிக்கிக் கொள்வாரா என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications