ஆட்டத்தை மாற்றும் எடப்பாடி.. ‘3 கணக்குகள்’ ‘கேப்பில் ஏவும் அஸ்திரம்’.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஸ்கெட்ச்!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் நேற்று அளித்த தீர்ப்பால் உற்சாகமாகியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்தத் தீர்ப்பை வைத்து '3' முக்கியமான கணக்குகளைப் போட்டிருக்கிறாராம்.
கடந்த சில நாட்களாக நடந்து வந்த ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான நிகழ்வுகள் இந்த ஒரே தீர்ப்பால் மொத்தமாக மாறிவிடும் என எதிர்பார்க்கிறாராம் ஈபிஎஸ்.
ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வழக்கு விசாரணைக்கு வர சில காலம் பிடிக்கும் என்பதால், அதற்குள் சில வேலைகளைச் செய்ய வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் ஆர்டர் போடப்போகிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அடுத்த தீர்ப்பு வருவதற்குள், முழுமையாக தன் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தான் ஈபிஎஸ் போடும் கணக்குகளின் ஒரே நோக்கமாம்.
கேட்டுச்சா.. ‛இடைக்கால’ இல்லை.. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரே இபிஎஸ் தான்!அழுத்திய மாஜி அமைச்சர்கள்
மாறிய தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என ஆகஸ்ட் 17ஆம் தேதி ஐகோர்ட் தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 நாட்களில்
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், பலரும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பனும் ஓபிஎஸ் அணிக்குத் தாவினார். இன்னும் எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது ஓபிஎஸ் தரப்பு. அவர்களும், நேற்றைய தீர்ப்பையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அடுத்த பிடி கிடைக்கும் வரை
இந்நிலையில், நேற்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்ததால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் நகர்த்தும் ஓபிஎஸ் டீமின் முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இனி, அடுத்த பிடி கிடைக்கும் வரை ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு யாரும் செல்ல மாட்டார்கள் எனக் கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சோதனைக் காலம்
கடந்த தீர்ப்பில் ஏற்பட்ட பின்னடைவால், ஈபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. கடந்த இரண்டரை மாத காலத்தில், இந்த 15 நாட்கள் தான் எடப்பாடி தரப்புக்கு மிகவும் சோதனையான காலகட்டம் எனலாம். அதிமுகவில் நிலையே மாறிப்போய், ஓபிஎஸ் பக்கம் தாவி வந்தனர் முக்கிய நிர்வாகிகள். நேற்று வந்த தீர்ப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, 3 முக்கியமான கணக்குகளைப் போட்டிருக்கிறாராம்.
3 கணக்குகள்
இந்த தீர்ப்பின் காரணமாக நமது கை ஓங்கும். கடந்த சில நாட்களில் நடந்தது போல விரும்பத்தகாத சம்பவங்கள் இனி நடக்காது என நம்பிக்கையோடு இருக்கிறாராம் ஈபிஎஸ். விரைவில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் உடனும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஈபிஎஸ் நடத்த இருக்கிறாராம். இனி ஒரு நிர்வாகி கூட ஓபிஎஸ் பக்கம் செல்லக் கூடாது, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது நிர்வாகிகளுக்குப் பறக்கும் உத்தரவாம்.
கணக்கு 2
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் வரிசைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு வருவதற்கு சில காலம் ஆகும். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி தனது அணியை மேலும் வலுவாக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்கிறார்கள். இதற்காக, கடந்த பொதுக்குழுவின்போது நடந்ததைப் போல, ஓபிஎஸ் அணிக்குள் வலைவீசப்படும் எனக் கூறப்படுகிறது.
3வது திட்டம்
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என பெரும்பான்மையானோர் நம் பக்கம் தான் இருக்கிறார்கள். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திலும் நம் கையே ஓங்கும். எனவே இங்கே இருப்பதுதான் அதிமுகவின் எதிர்காலம் எனக் கூறி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உடன் பேசி அவர்களை ஈர்க்கும் வகையில் வேலையைத் தொடங்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் இன்னொரு திட்டம் என்கிறார்கள்.