நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 "பாயிண்ட்கள்"..துள்ளி குதிக்கும் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செயலாளராக இருக்கும் அதிமுக தலைமை கழகம் மூலம் இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.
அதோடு, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி ஜூலை 11ல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர!
வழக்கு
ஆனால் பொதுக்குழுவை தலைமை கழகம் கூட்ட முடியாது. அப்படியே கூட்டினால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் சட்ட விரோதமானது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார். அதோடு கடந்த பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவமதிப்பு வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை நாளை நடக்க உள்ளது. இதில் அவமதிப்பு வழக்கு மட்டும் நாளை விசாரணை செய்யப்படும். மாறாக பொதுக்குழுவிற்கு எதிரான மனு அவசரமாக விசாரிக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்தார்.
அவமதிப்பு வழக்கில் சாதகம்
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறது. அதன்படி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 23 மசோதாவை நிராகரித்து உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமனத்தை அறிவித்து உள்ளனர். அதனால் அவமதிப்பு வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்புகிறதாம்.
ஓ பன்னீர்செல்வம் தரப்பு திட்டவட்டம்
அதோடு பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கிலும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறதாம்.
1. தேர்தல் ஆணையம் தீர்ப்புபடி இப்போதும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்தான். அதனால் அவர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அவைத்தலைவர் அல்ல.
2 . ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்றால் பொதுக்குழுவும் மொத்தமாக காலாவதியாகிவிட்டது என்றே அர்த்தம். ஜூலை 11 இதனால் பொதுக்குழு கூட முடியாது.
3. அப்படியே ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே காலாவதி ஆனாலும், சட்டப்படி அதிமுகவில் அவைத்தலைவர் - பொருளாளருக்கு அதிகாரம் உள்ளது. அவைத்தலைவர் நியமனம் சிக்கலாகி உள்ள நிலையில் பொருளாளருக்கே அதிக அதிகாரம் உள்ளது.
Recommended Video
சட்ட ஆலோசனை
இதுதான் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைக்கும் வாதம். இந்த 3 புள்ளிகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு குஷியில் இருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். நாளை வழக்கு விசாரணை இருக்கிறது. சட்ட விதிகளில் எது நமக்கு ஆதரவாக உள்ளது. என்ன செய்யலாம் என்று எடப்பாடி தரப்பு ஆலோசனை செய்துள்ளதாம். மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை நாளை கோர்ட்டில் சமர்ப்பிக்கலாமா என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உள்ளதாம்.