அவருக்கு ஒரு நியாயம்.. இவருக்கு ஒரு நியாயமா? கண்கள் சிவந்த விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் வச்ச 3 கன்னிவெடி!
சென்னை: மாஜி அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு அவருக்கு நெருக்கமானவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு நடத்தியது. எஸ்.பி வேலுமணி வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு இடையில் இவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது.
முன்னதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. அதிகாலையில் பரபரப்பு
வழக்கு
வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது. இதில் ஊழல் நடைபெற்று உள்ளதாக 13 இடங்களில் ரெய்டு நடக்கிறது.
ரெய்டு
ரெய்டுக்கு இடையில் வேலுமணி வீட்டில் எக்கச்சக்கமாக அதிமுக நிர்வாகிகள் குவிந்தனர். கிட்டத்தட்ட 6 எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் குவிந்தனர். அதோடு அதிமுக மகளிரணி நிர்வாகிகள் பலர் வேலுமணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். முக்கியமாக வேலுமணி வீடு முன் குவிந்து போராட்டம் செய்தனர். இதனால் போலீசார் இவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் குவிந்தனர். பெண் போலீசாரும் அதிக அளவில் அங்கே குவிந்தனர்.
ஆதரவு
இதனால் அங்கே சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. மாஜி அமைச்சர் சிவி சண்முகம் கூட எஸ்.பி வேலுமணியை நேரில் சந்திக்க முயற்சி செய்தார். அதோடு போகிற வழியில் போலீசுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி வேலுமணி வீட்டில் 3வது முறையாக ரெய்டு நடந்தும் கூட அவருக்கான ஆதரவும், போராட்டமும் அதே அளவில் இருந்தது.
விஜயபாஸ்கர்
ஆனால் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று ரெய்டு நடந்த போது பழைய அளவில் இருந்தது போன்ற கூட்டம் இல்லை. அவரை பார்க்க பெரிதாக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வரவில்லை. வேலுமணி வீட்டில் இருந்த அளவிற்கு விஜயபாஸ்கர் வீட்டில் கூட்டமோ, அவரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டமோ இல்லை. போலீசும் இதை உணர்ந்து கொண்டு அங்கு குறைவாகவே நிறுத்தப்பட்டு இருந்தது. எஸ்.பி வேலுமணிக்கு கொடுக்கப்பட்ட அளவிற்கு விஜயபாஸ்கருக்கு இன்று பெரிதாக ஆதரவு தரப்படவில்லை.
எம்எல்ஏக்கள்
இதுதான் அதிமுகவில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு என்றால் கட்சியே இறங்கி வருகிறது. இவருக்கு என்றால் வரவில்லை. இது என்ன நியாயம் என்று கேட்கிறார்கள். இந்த ரெய்டை எதிர்பார்க்காத விஜயபாஸ்கர் தரப்பு கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி செக் வைப்பதால் விஜயபாஸ்கர் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏக்கள்
ஏற்கனவே குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்துள்ளது. இது போக மேலும் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மரண விசாரணையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுவும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.
ஜெயலலிதா மரணம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த போது விஜயபாஸ்கர்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவர்தான் ஜெயலலிதா சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவமனையில் அடிக்கடி இருந்தார். இதனால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இப்படி வரிசையாக குட்கா வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. ஜெயலலிதா மரண விசாரணை என்று ஆளும் தரப்பு 3 விதமான விசாரணைகளை விஜயபாஸ்கர் மீது ஏவி உள்ளது அவருக்கு நெருக்கமானவர்கள் இடையே பதற்றத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.