அடேங்கப்பா.. 3.3 லட்சம் புத்தகம்! பிரமாண்டமான மதுரை கலைஞர் நூலகத்தின் வியக்க வைக்கும் வசதிகள்! செம
சென்னை: மதுரையில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் இந்த புதிய நூலகத்தில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கருணாநிதியின் நினைவாக மதுரையில் பிரமாண்டமாக நூலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து ரூ.215 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தான் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் தான் மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் புதுநத்தம் சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் முறையான திட்டமிடலுடன் ஓராண்டில் விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 215 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மின்னணு நூலகம் செயல்பட உள்ளது. மேலும் பார்வையற்றவர்கள் படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், சுயஉதவி குழுவினர்க, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்களுக்கான பயிற்சி வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மொத்தம் 3.3 லட்சம் புத்தகம் உள்ளன. இதில் அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், அரசியல், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு, குழந்தை இலக்கியங்கள், அறிவியல், விஞ்ஞானம் என அவை துறைவாரியாக வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. புத்தகத்துக்காக மட்டும் ரூ.60 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொருவரும் அமர்ந்து படிக்கும் வகையில் பர்னிச்சர்கள் போடப்பட்டுள்ளன. நவீன அலமாரிகள் என மொத்தம் ரூ.19 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. மேலும் 700 பேர் வரை அமரும் வகையில் கான்பரன்ஸ் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூல்களைப் பெறுவதற்காகவும், திரும்ப ஒப்படைப்பதற்காகவும் தனித்தனி இடங்கள் உள்ளன.
இதுதவிர வெளியில் இருந்து நூல்கள் கொண்டு வந்து இங்கு படிக்கலாம். இதற்காக தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர குழந்தைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்றோருக்காக தனித்தனியே அமர்ந்து படிக்கவும் இடங்கள் பிரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதுவிர குழந்தைகளளுக்காக ஒலி மற்றும் ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் தளம் என்பது குழந்தைகளுக்கானதாக அமைக்கப்பட்டுள்ளது. 2வது தளத்தில் தமிழ் இலக்கியம் சார்ந்த புத்தகங்களும், 3வது இடத்தில் ஆங்கில புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்களும், 4வது தளத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான புத்தகங்களும், 5வது தளத்தில் ரெபரன்ஸ் நூல்களும், 6ம் தளத்தில் நிர்வாகி பிரிவும் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications