"புல் பவர்" தரேன்.. ஆனால் சமரசம் செய்ய மாட்டேன்.. டிஜிபிக்கு ஸ்டாலின் போட்ட புது உத்தரவு.. என்ன அது?
டிஜிபிக்கு முதல்வர் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்
சென்னை: சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று கறாராக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "தமிழகம் நம்பர் 1" என்ற நிலையை அடைய வேண்டும் என்ற தனது கனவு திட்டத்தை, நம்பி ஒப்படைக்கிறேன் என்று காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, சைலேந்திர பாபு எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக உள்ளார்.
பதவியேற்றதுமே இவர் 2 முக்கிய விஷயங்கள் குறித்து பேசினர்.. ஒன்று, தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்குவது, மற்றொன்று குழந்தைகள் கடத்தல் ஒழிப்பதுதான் முதல் என்றார்.
பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கு கவலையளிக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
2 விஷயங்கள்
அதன்படியே, ஆக்ஷனில் இறங்கினார்.. குழந்தைகள் கடத்தல் கும்பல்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார்.. அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் அதிரடியாக கைது செய்தார்.. இந்த விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக டிஜிபியை கூப்பிட்டு பாராட்டியதாகவும் செய்திகள் வந்தன.. இதற்கு பிறகு, பல வருட காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடிகளையும் நாலாபுறமும் வேட்டையாடி கைது செய்தார்.. இப்படி டிஜிபியின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உத்தரவு
ரவுடிகளை ஒடுக்குவதற்கான முழு அதிகாரத்தையும் முதல்வர், டிஜிபிக்கு அளித்ததாக அப்போதே கூறப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை இதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாடு நேற்றைய தினம் நடந்தது.. அப்போது முதர்வர் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதை, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்.
சமரசம் செய்ய மாட்டேன்
சட்டம் - ஒழுங்கு விஷயத்தில், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது... மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதித்து விடக்கூடாது. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற மக்களை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும்சரி, உடனடியாக ஒடுக்க வேண்டும்.
கூலிப்படைகள்
சட்டம் - ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய, சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளையும் அதிரடியாக கைது செய்ய வேண்டும்.. மாவட்ட அளவில் முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால், பொது மக்கள் தலைமை செயலகத்திற்கு மனுக்களை அனுப்புகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும், மாவட்டத்தின் தலைமை வழிகாட்டியாக, நீங்கள் திகழ வேண்டும்.
நம்பர் 1
"தமிழகம் நம்பர் 1" என்ற நிலையை அடைய வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை, உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். அதனால், அனைவரும் நேர்மையாக, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேணடும். அப்படி செயல்படுவோருக்கு, அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்" என்றார்.. முதல்வர் இப்படி தெரிவித்ததையடுத்து, எந்த உத்தரவும் இனி டிஜிபியிடம் இருந்து எந்நேரமும் பறந்து வரலாம் என்று காவல்துறையில் எதிர்பார்க்கப்படுகிறது.