15 ரூம்கள்.. எல்லோரும் ரெடியா இருங்க.. ஆழ்வார்பேட்டையில் ஆர்டர் போட்ட ஓபிஎஸ்.. ஆட்டம் க்ளோஸ்!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று நடக்க உள்ள நிலையில் நேற்று ஓ பன்னீர்செல்வம் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த ஓ பன்னீர்செல்வம் முக்கியமான சில விஷயங்களை விவாதித்தாக கூறப்படுகிறது.
இதில் தனது ஆதரவாளர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
அதிமுகவில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும்.
மொத்தமாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எல்லா அறிவிப்புகளும் செல்லாமல் போகும்.

பதவி பறிபோகும்
முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் பறிபோகும். ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு வழக்கு தனக்கு சாதகமாக வரும் என்று தீவிரமாக நம்புகிறாராம். தனி நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரிக்கிறார். பொதுக்குழுவை ஆதரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மாற்றப்பட்டதால் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

நம்பிக்கை
அதேபோல் அதிமுகவில் துணை எதிர்கட்சித் தலைவர் மாற்றப்பட்டதை இன்னும் சபாநாயகரும் அங்கீகரிக்கவில்லை. இந்த விஷயங்களை வைத்து தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறாராம். இதன் காரணமாகவே அதிமுகவில் தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை ஓ பன்னீர்செல்வம் நேற்று சந்தித்தார். நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

என்ன சொன்னார்?
இதில் பேசிய ஓ பன்னீர்செல்வம்.. எல்லோரும் ரெடியாக இருங்கள். தீர்ப்பு நமக்கு சாதகமாக வர போகிறது. எல்லாம் மாற போகிறது. தீர்ப்பு வந்ததும் நாம் மாவட்ட வாரிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். வட மாவட்டங்களுக்கும் வருவேன். என்னுடைய ஆதரவாளர்களை திரட்டி என்னை வரவேற்க்க தயாராக இருங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அதோடு நாம் சென்னையில் அலுவலகம் திறக்க வேண்டும். தற்காலிகமாக ஆபிஸ் போட வேண்டும்.

ஆபிஸ்
இப்படி தனியார் ஹோட்டல்களில் சந்திக்க முடியாது. மந்தை வெளியில் எனக்கு தெரிந்த இடம் உள்ளது. அது 14 ரூம்கள் கொண்ட ஆபிஸ். அங்கே சென்றுவிடலாம் என்று சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ். இது போக நேற்று கூட்டத்தில் சசிகலா - டிடிவி தினகரன் உடன் இணையலாமா என்றும் கேட்டு இருக்கிறார் ஓபிஎஸ். இதற்கு நிர்வாகிகள்.. கண்டிப்பாக இணைய வேண்டும். நீங்கள் மூன்று பேரும் இணைந்து செயல்பட்டால் எடப்பாடியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.

வழக்கு
அதோடு அதிமுக சார்பாக புதிய நிர்வாகிகளை மாவட்டம் தோறும் நியமனம் செய்யவும் ஓ பன்னீர்செல்வம் இதில் முடிவு செய்துள்ளாராம். அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை வருகிறது. இன்னும் 2 வாரங்களுக்குள் நமக்கு சாதகமாக முடிவு வரும். அப்படி வந்தால் அதிமுக அலுவலகத்தை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும். ஆனால் இந்த முறை சட்ட ரீதியாக கைப்பற்ற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications