சென்னை தலைமைச் செயலகத்தை அதிரவைத்த காவலர் கோதண்டபாணி.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, நீதி கோரி தலைமை காவலர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போராட்டத்தில் அவர் செய்த செயல் காவலர்களை ஆடிப்போக வைத்தது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையை அடுத்த ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்த கோதண்டபாணி, சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு அவரது மகளுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்ட நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின் போது குழந்தைக்குத் தவறான முறையில் 'ட்ரிப்ஸ்' ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகக் குழந்தையின் வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, கால் கருமை நிறமாக மாறியுள்ளது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, குழந்தையின் உயிரைக் காக்க அவளது வலது பாதத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோதண்டபாணி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் முன்பே தெரிவித்திருந்தார்.
இதுபற்றி கூறும் போது, கோதண்டபாணியின் புகார் பதிவாகியுள்ளது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். எந்த மருத்துவருக்கும் அந்த குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் இல்லை. அவர்கள் அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதா என்று ஆய்வு செய்து இந்த குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து கட்டாயமாக நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது மகளுக்கு நீதி கோரி, காவலர் சீருடையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த கோதண்டபாணி, திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications