மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்ததெல்லாம் சரி! ஆனால்.. பெண் அரசியல்வாதிகள் சொல்வது என்ன?
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையில் நிறைவேறவுள்ளது.
இந்நிலையில் இந்த இட ஒதுக்கீடு பற்றி தமிழக அரசியல் கட்சிகளின் பெண் பிரமுகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஒன் இந்தியா தமிழ் சிலரிடம் பேசியது. அப்போது அவர்கள் கூறியதை இங்கே பார்க்கலாம்.

பூங்கோதை ஆலடி அருணா (திமுக): ''பெண்களுக்கு சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை வரவேற்கிறேன். ஆனால் அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. இன்னும் 7 ஆண்டுகள் கழித்துத் தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்பதை ஏற்க முடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மற்ற மசோதாக்களை எல்லாம் உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் மத்திய அரசால் இதனை கொண்டு வர முடியாதா? நாங்கள் சாதனை செய்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதில் மட்டும் பாஜக குறியாக உள்ளது.''
அனுஷா ரவி (மக்கள் நீதி மய்யம்): ''நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வழிவகுக்கும் இந்த மசோதாவை வரவேற்கிறேன். அதே வேளையில் 2029-ல் தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. மத்திய அரசு நினைத்தால் வரும் மக்களவைத் தேர்தலிலேயே இதனை அமல் படுத்தலாம். ஏனோ தெரியவில்லை, இவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது.''
ரொஹையா ஷேக் (மதிமுக): ''பாஜக அரசு கொண்டு வந்துள்ள பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பது பல்லாண்டு காலமாக இருந்து வந்த கோரிக்கையாகும். பாஜகவின் சிந்தனையில் உதித்து கொண்டு வரப்பட்ட மசோதா அல்ல. ஏற்கனவே 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்த மசோதா கொண்டுவரப்பட்ட போது பாஜக எதிர்த்தது. இப்போது கொண்டு வந்துள்ளது, எது எப்படியோ இந்த மசோதாவை வரவேற்கிறேன். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தான் இதனை செயல்படுத்துவோம் என்பதை ஏற்க முடியாது.''












Click it and Unblock the Notifications