அங்கேயே நாம ஜெயிச்சிட்டோம்.. ‘அவங்க சொன்ன யோசனை கரெக்ட்’ - ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் சொன்ன விஷயம்!
சென்னை : தனக்கு சாதகமான தீர்ப்பால் உற்சாகமாகியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களிடம், வழக்கு விசாரணையின் அந்தப் புள்ளியிலேயே நாம் ஜெயித்துவிட்டோம் என மகிழ்ச்சியாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நீதிபதியை மாற்றுமாறு விடாமல் கோரிக்கை வைத்து, நம் கோரிக்கை ஏற்கப்பட்டபோதே நாம் பாதி ஜெயித்துவிட்டோம் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளை வைத்தே, வழக்கில் நாம் ஜெயித்து விடுவோம் என வக்கீல்கள் சொன்னார்கள் என இன்று தீர்ப்புக்குப் பிறகு தனது ஆதரவாளர்களிடம் அகமகிழ்ந்து கூறியுள்ளார் ஓபிஎஸ்.
தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வென்று வந்த நிலையில், இன்றைய தீர்ப்பு, ஈபிஎஸ் தரப்புக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது.
பூ பாதையா..? சிங்கப்பாதையா..? எடப்பாடி முன் இருக்கும் இரண்டே இரண்டு வாய்ப்புகள் - விரைவில் டாஸ்
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த 'நெகட்டிவ்’ சிக்னல்!
நீதிபதி மாற்றம்
அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக பொதுக்குழு கூட்டம் நடந்ததாக கூறி, பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேண்டுகோளை ஏற்று நீதிபதி மாற்றப்பட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
2 நாட்கள் விசாரணை
கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்ட நீதிபதி, அதிமுகவைப் பொறுத்தவரை ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு பூஸ்ட் போல அமைந்துள்ளது இந்தத் தீர்ப்பு.
மாறி வீசிய காற்று
நீதிபதி மாற்றப்பட்டதுமே இந்த வழக்கில் அதுவரை வீசி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான காற்றும் மாறி வீசத் தொடங்கியது. அதிமுக விவகாரத்தில், அதுவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களின் பார்வை போலவே நிகழ்ந்து வந்த விசாரணை, உட்கட்சி விதிகள், பதவிகள் நியமனம் தொடர்பாகச் சென்றது. பை-லாவை நம்பியே களமிறங்கிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களும், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, முக்கியமான வாதங்களை எடுத்து வைத்தனர்.
பிறந்த நம்பிக்கை
வழக்கின் விசாரணையின்போதே, எடப்பாடி பழனிசாமி தரப்பினரை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினார் நீதிபதி ஜெயச்சந்திரன். அதுவே, ஓபிஎஸ் தரப்புக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான விதிமுறைகள் பற்றியும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆனதாக ஈபிஎஸ் தரப்பு முன்வைத்த வாதங்கள் தொடர்பாகவும் காரசாரமாக நடந்த விவாதத்தில், ஓபிஎஸ் தரப்பின் கையே ஓங்கியிருந்தது.
உற்சாக ஓபிஎஸ்
நீதிபதியின் விசாரணைப் போக்கை வைத்தே, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், ஓபிஸ்ஸிடம் தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வரும் என நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதன்படியே, நேற்று மாலை தனியார் ஹோட்டலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ். அவர்களிடம் நம்பிக்கையாகப் பேசியுள்ளார். இரவு 10 மணியளவில் ஆதரவாளர்கள் உடனான சந்திப்பை முடித்துவிட்டு ஹோட்டலில் இருந்து கிளம்பியபோதும் சிரித்த முகத்துடன் நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றார்.
எதிர்பார்த்தபடியே
அதன்படி, இன்று தீர்ப்புக்காக காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் எதிர்பார்த்தபடியே வெற்றிக்குறி கிடைத்துள்ளது. இதையடுத்து, தனது ஆதரவாளர்கள் பலரை தனது வீட்டிலேயே சந்தித்தார் ஓபிஎஸ். மேலும், தனக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் படையையும் வீட்டுக்கு அழைத்து பாராட்டுத் தெரிவித்ததோடு, சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை ஈட்டித் தந்ததற்கு நன்றியும் தெரிவித்தார்.
அன்றே மாறிவிட்டது
தீர்ப்புக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் இன்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், நீதிபதி மாற்றப்பட்டபோதே நமக்கு பாதி வெற்றி கிடைத்துவிட்டது. நீதிபதியை மாற்ற நாம் மீண்டும் கோரிக்கை வைக்காமல் விட்டிருந்தால், இந்தத் தீர்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. நம்ம லீகல் ஆட்கள் சொன்ன யோசனைதான் வெற்றிக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.
ஏற்றம் கொடுத்த பை-லா
மேலும், புது நீதிபதி வந்து விசாரணையை ஆரம்பித்ததுமே நம்ம வக்கீல்கள் சொல்லிவிட்டார்கள். இவர் பை-லாவுக்குள் எல்லாம் போய்ட்டார். நம் பக்கம் கேஸ் மாறுது, இதுவரை நீதிபதிகள் யாரும் இப்படி கட்சி விதிகளுக்குள் குடைந்து கேள்வி எழுப்பவில்லை, நாம் முன்வைத்தாலும் எடுபடவில்லை, இவர்தான் டெப்த்தா இறங்கியிருக்கார். நாம ஜெயிச்சிடுவோம் என்றார்கள். அதன்படியே நமக்கு சாதகமாக எல்லாம் நடந்திருக்கிறது என தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.