"நெய் பொங்கலும் கேசரியும் ரொம்ப பிடிக்கும்.." பரபர அரசியல் களத்திற்கு நடுவே.. ஆளுநர் ரவி ஜாலி பேச்சு
சென்னை: காட்டாங்கொளத்தூரில் சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் மாணவர்கள் கேட்ட பல கேள்விக்கு ஜாலியாக பதிலளித்தார்.
தமிழ்நாடு- தமிழகம் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து சட்டசபையில் அரசு தயார் செய்து கொடுத்த உரையில் ஆளுநர் சில வார்த்தைகளைத் தவிர்த்தது சர்ச்சையானது.
இது தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சர்ச்சையே இப்போது தான் ஓய்ந்துள்ள நிலையில், ஆளுநர் ரவி மாணவர்களுடன் ஜாலியாக ஒரு உரையாடலை நடத்தியுள்ளார்.
ஆளுநர் ரவி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75ஆவது பவள விழா நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, குத்து விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும், சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் பவள விழா கல்வெட்டைத் திறந்து வைத்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கலும் கேசரியும் பிடிக்கும்
அதன் பிறகு சிவானந்த சரஸ்வதி பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் ரவி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர், தமிழ்நாட்டில் உங்களுக்குப் பிடித்த உணவு எது என்று கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி, "எனக்குச் சின்ன வயது முதலே உணவில் எந்தவொரு பிரச்சினையும் இருந்தது இல்லை.. உணவு என்றாலே எனக்குப் பிடிக்கும். தமிழ்நாட்டில் பொங்கலும் கேசரியும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக நெய் அதிகம் சேர்த்துச் சமைக்கும் பொங்கல் ரொம்ப பிடிக்கும் என்றார்.
மாணவர்களுக்கு அட்வைஸ்
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் தங்கள் கல்வியில் பெற்ற பெற பலத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். குறிப்பாகப் படிப்பு விஷயத்தில் அதிக கவனத்துடன் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், ஆலமரத்தின் விதை சமையலுக்குக் கடுகை விட சிறியது என்றாலும் கூட அது அது மரமாகும் போது மிகப் பெரியதாக வளரும் என்றும் அதுபோல மாணவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்றார்.
இணையச் சேவை
மேலும், இப்போது மாணவர்களுக்கு 24 மணி நேரமும் இணையச் சேவை கிடைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது நல்லது தான் என்றாலும் இதில் எந்தவொரு தீமையும் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இணையத்தை முறையாகப் பயன்படுத்தினால், மாணவர்களுக்கு அதை விடச் சிறந்த கருவி வேறு ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதைத் தவறாகப் பயன்படுத்தினால் ஆபத்தும் ஏற்படும் என்று கூறினார்.