நீதிபதி குறிப்பிட்ட ”ஜுன் 23”! கோ பூஜை முதல் சிவி சண்முகம் வரை! அடுத்து நிகழ்ந்த பரபரப்பு காட்சிகள்!
சென்னை : கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தீர்மானங்கள் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என குறிப்பிட்ட நிலையில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
Recommended Video
கடந்த 23ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதற்கு முன்தினம் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். அதனையடுத்து, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார்.
அதிமுக பொதுக்குழு
இதையடுத்து இந்த வழக்கை அன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நள்ளிரவில் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து உற்சாகமடைந்தாலும் தனித் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாததாகப் போனது.
ஜூன் 23
இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் பிரம்மாண்டமாக நடத்திய நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தங்களது இல்லங்களில் இருந்து புறப்பட்டு வானகரம் நோக்கி சென்றனர். முன்னதாக அதிமுக பொது குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஓ பன்னீர்செல்வம் தனது சென்னை இல்லத்தில் பசுவை வரவழைத்து கோ பூஜை மேற்கொண்ட நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு யாகம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
பொதுக்குழு கூட்டம்
இதை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்த மண்டபத்திற்கு இருவரும் வந்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னதாகவே ஓபிஎஸ் திருமண மண்டபம் வந்த நிலையில் மேடைக்கு வராமல் தனி அறையில் அமர்ந்திருந்தார். இதை அடுத்து சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு கூட்ட மண்டபத்திற்கு வந்தபோது அவரை உற்சாகமாக வரவேற்றனர் அதிமுகவினர். தொடர்ந்து பொதுக்குழு கூட்ட மேடைக்கு வருகை தந்தார் ஓபிஎஸ் அப்போது ஓபிஎஸ்ஐ துரோகி எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக வரவேண்டும் என முழக்கமிட்டனர்.
அவை தலைவர்
வழக்கமான அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் நிரந்தர அவை தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ஏற்றுக் கொண்ட நிலையில் அடுத்ததாக தீர்மானங்களை வாசிக்க தயாராகினர் நிர்வாகிகள். அப்போது திடீரென மைக்கை பிடித்த எடப்பாடி ஆதரவு முன்னாள் அமைச்சர்களான கேபி முனுசாமி சிவி சண்முகம் ஆகியோர் பொது குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் செல்லாது என அறிவித்தனர்.
தமிழ் மகன் உசேன்
இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதம் என கூறி ஒரு கடிதத்தை வாசித்தார் சி.வி சண்முகம். அதில் அதிமுக பொது குழுவை ஜூலை 11ஆம் தேதி கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என பேசினார். இதை அடுத்து அதிமுகவின் அப்போதைய நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறினார் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி இருக்கும் நிலையில் தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவைத்தலைவராக நிரந்தரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.