இந்திய தேர்தல் முடிவுகள்! சர்வதேச மீடியாக்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
சென்னை: இந்திய பொதுத் தேர்தல்களை சர்வதேச மீடியாக்கள் மிகுந்த முக்கியத்துவம் தந்து அணுகி வருகின்றன. நியூயார்க் டைம்ஸ், பிபிசி என உலகப் புகழ் பெற்ற ஊடகங்கள் தங்கள் வெப்சைட்டின் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக இந்திய தேர்தல் முடிவுகளைத்தான் காண்பித்துக்கொண்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் செய்தியில், எதிர்பார்த்ததைவிட நெருக்கடியான நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் வந்து கொண்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. பிபிசி தனது தலைப்புச் செய்தியாக, "மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த மோடியின் நம்பிக்கை சரிந்துள்ளதை முதல்கட்ட ட்ரெண்ட் காட்டுகிறது" என்று வெளியிட்டுள்ளது. செய்தியின் துணைச் செய்திகளாக, மோடியின் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலைமை எப்படி உள்ளது என்ற தலைப்பிலும், மக்களை தனித்தனி குரூப்பாக பிரிப்பதில் 10 ஆண்டுகள் மோடியின் இந்தியாவில் எப்படி இருந்தன என்ற தலைப்பிலும் பிபிசி செய்திகளை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல செய்தி இணையதளம், டான் வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தியில், இந்திய தேர்தலில் மோடியின் கூட்டணி முன்னிலை வகிக்கிறது, ஆனால், கணிப்புகளை பொய்யாக்கியுள்ளன எதிர்க்கட்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செய்தி வெப்சைட் தி ஸ்ட்ரைய்ட்ஸ் டைம்ஸ், மோடி தலைமையிலான கூட்டணிக்கு முன்னிலை என்றும், ஓட்டு நடைமுறையில் மிகப்பெரிய தேர்தல் இது என்றும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெப்சைட், மோடி கூட்டணி பெரும்பான்மை நோக்கி போய்க் கொண்டுள்ளது. ஆனால் பெரிய வெற்றியை பறிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
சீனாவின் குலோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்திய தேர்தல் பற்றி தனது முகப்பு பக்கத்தில் எந்த செய்தியும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications