அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது..? சூரப்பா கடிதமும்.. கிளம்பிய எதிர்ப்பும்.. முழு பின்னணி..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
மாநில நிதி உரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதலாம் என அரசியல் கட்சிகள் வரிந்துக் கட்டி நிற்கின்றன.
இதனிடையே தமிழக அரசின் ஒப்புதலுடன்தான் மத்திய அரசுக்கு தாம் கடிதம் எழுதியதாக விளக்கம் அளித்துள்ளார் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா.
நடித்தால் தான் நாலு பேருக்கு தெரியும்.. நண்பர்கள் தந்த யோசனை.. ஹீரோவாகிறார் விஜயகாந்த் மூத்த மகன் !
1978-ம் ஆண்டு
தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1978-ம் ஆண்டு சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 42 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் முதல்நிலை அங்கீகாரத்துடன் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் அது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லக்கூடும் என கல்வியாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இரண்டாக பிரிப்பு
இந்திய கல்வி நிறுவனங்களை உலக தர வரிசைப் பட்டியலில் இடம்பெற வைக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகமும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் என அறிவித்து கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதற்கான மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கு பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பு காரணமாக ஆளுநர் பன்வாரிலால் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
சூரப்பா கடிதம்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பை எதிர்பார்க்கிறது மத்திய அரசு. நிதி ஒதுக்கீடு குறித்தோ, பங்களிப்பு பற்றியோ இன்னும் தமிழக அரசு வாய் திறக்காத நிலையில் மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா.
தன்னிச்சையாக கடிதம்
அதில் ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தான் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சூடாக்கியுள்ளது. ஒரு துணைவேந்தர் தன்னை மாநிலத்தின் முதலமைச்சராக நினைத்துக்கொண்டு செயல்படுகிறாரோ என திமுக தலைவர் ஸ்டாலின் வினவியிருந்தார்.
கல்வியாளர்கள்
இந்தியாவில் உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 கல்வி நிலையங்களில் 8 மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகமும், மேற்கு வங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் மாநில அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் நாளடைவில் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்பது தான் இப்போது கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க அரசு கடும் நிதிச்சுமையில் இருப்பதால் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெற போதிய நிதி பங்களிப்பு செய்ய முடியாது என நாசூக்காக கூறிவிட்டார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனது முடிவை இன்னும் தீர்க்கமாக அறிவிக்காததன் விளைவாக இது பூதாகரமாகி வருகிறது. உயர் சிறப்பு அந்தஸ்து என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கை நழுவிச் சென்றுவிடக் கூடாது என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.