சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன? ’1989ல் நடந்தது.. மீண்டும் அதேதான்’- அடித்துச் சொல்லும் ஆதரவாளர்கள்!
சென்னை : ஜானகி அணி - ஜெ. அணி இணைப்புக்கு பாலமாக இருந்தது போல ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளின் இணைப்புக்கும் உதவுவார் சசிகலா என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
1989ல், மக்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருப்பதை உணர்ந்து, ஜானகி, கட்சிப் பொறுப்புகளை ஒப்படைப்பதற்கான கடிதத்தை சசிகலா மூலமே கொடுத்து அனுப்பினாராம்.
அதேபோல, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளின் இணைவுக்கும் சசிகலாவே பாலமாக இருப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அதனால் தான் இன்னும் ஒரு அணிக்கு ஆதரவு தருவதாக வெளிப்படையாக பேசவில்லை, இரு அணிகளையும் இணைப்பதே சசிகலாவின் திட்டம் என்கிறார்கள்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் - சசிகலா
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிகார யுத்தம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுடன் சேர்ந்து ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவோடு, ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ச்சியாகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திப்பார் என்றும் தகவல்கள் சிறகடித்து வருகின்றன. அதேநேரத்தில் தமிழக முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சசிகலாவின் திட்டம்
சசிகலா, தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றும், கட்சியை மீட்டெடுப்பேன் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். சசிகலாவின் திட்டம் என்ன என்பது பற்றி அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், கட்சியை பலவந்தமாகக் கைப்பற்றுவது சசிகலாவின் திட்டம் கிடையாது, அப்படிச் செய்வதென்றால் சிறையில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்தபோதே செய்திருப்பார். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் சசிகலாவின் குறிக்கோள் என்கிறார்கள்.

இணைப்புதான் குறிக்கோள்
அதாவது, இப்போதைய சூழலில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைத்து கட்சியை வலுப்படுத்துவதே சசிகலாவின் எண்ணமாம். அதன் காரணமாகவே, ஓபிஎஸ்ஸுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது போல காட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள். ஒற்றுமைக்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகிறார் என்றும், சுற்றுப்பயணம் மேற்கொள்வதும் நிர்வாகிகளைச் சந்தித்து வருவதும் கூட, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள்.

1989 தேர்தல்
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதிமுகவில் ஜா. அணி, ஜெ. அணி என பிளவு உண்டானது. அப்போது பெரும்பான்மையான நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஜானகி பக்கமே இருந்தனர். பின்னர் அந்த ஆட்சி கலைந்து தேர்தல் வந்தபோது அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. அந்தத் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. ஜானகி அணி வெறும் 2 இடங்களையும், ஜெ அணி 27 இடங்களையும் கைப்பற்றின.

உணர்ந்த ஜானகி
இதையடுத்து, தனது அணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த ஜானகி, அணிகளை இணைக்க முடிவெடுத்தார். அப்போது ஜானகி, ஜெயலலிதாவுடன் பேச சசிகலாவை அணுகினாராம். சசிகலா ஜானகியை சந்திக்க ஜெ.முதலில் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவரைச் சம்மதிக்க வைத்து பின்னர் சென்று ஜானகியை சந்தித்துள்ளார். ராமாபுரம் தோட்டத்தில் ஜானகி அழைப்பின் பேரில் சென்று சந்தித்த சசிகலாவிடம், எல்லோரும் இணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர் பெயரைக் காப்பாற்ற வேண்டும். அணிகளை இணைக்க ஒப்புக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாராம்.

ஜானகி அளித்த கடிதம்
ஜெயலலிதாவே தலைமை தாங்கட்டும் எனத் தெரிவித்து ஒரு கடிதத்தையும் சசிகலாவிடம் அளித்தாராம். அதுதான் அதிமுகவை ஒன்றாக இணைத்து மீண்டும் வலுப்படுத்தியது. பின்னர் ஜானகி அரசியலை விட்டே விலகினார். ஜானகி ராமச்சந்திரன் தன்னை அழைத்துப் பேசி கடிதம் கொடுத்த தகவலை சசிகலாவே பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

இன்றும் அதேபோல
அந்தவகையில், சசிகலாவே ஜானகி அணி - ஜெ.அணி இணைப்புக்கு பாலமாக இருந்தவர். அதேபோலத்தான் தற்போதும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவையும் இணைத்து வைக்கும் பாலமாக சசிகலா செயல்படுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். மற்றபடி, எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, கட்சியைக் கைப்பற்றும் எண்ணமெல்லாம் சசிகலாவிடம் துளியும் இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஓபிஸ்ஸும் ஓகே
சசிகலாவின் இந்த முடிவு ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டதாகவும், தானும் அதற்கு தயாராகவே இருப்பதாக ஓபிஎஸ் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தான், இணைப்புக்கான முயற்சிகளை ஓபிஎஸ் டீம் தீவிரமாக முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ முரண்டு பிடித்து வருகிறார். அவரும் நிச்சயமாக இந்த இணைப்பு முயற்சியை ஏற்றுக்கொள்வார் என நம்பிக்கையோடு பேசுகிறார்கள் சசிகலா தரப்பினர்.












Click it and Unblock the Notifications