இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வரும் அமித் ஷா.. குவிக்கப்பட்டுள்ள போலீசார்.. முழு பயண திட்டம் என்ன
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வரும் நிலையில், அவரது பயணத் திட்டம் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த அண்ணாமலை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் தமிழ்நாடு முழுக்க மாபெரும் பாத யாத்திரை செல்கிறார்.

"என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடக்கும் இந்த பாதயாத்திரை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறும். அடுத்தாண்டு மக்களவை தேர்தலைக் குறிவைத்தே இந்த பாத யாத்திரையை அவர் நடத்துகிறார்.
இந்த பாத யாத்திரை ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிலையில், இதனை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். இதற்கு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துப் பார்க்கலாம்.
பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து அமித் ஷா மதுரைக்கு வருகிறார்.. மாலை 5.45 மணி முதல் 7.15 மணி வரை பாத யாத்திரை தொடங்க நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து 7.25 முதல் 8.30 வரை தங்கும் விடுதியில் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகு 8.30 மணிக்குக் கட்சி முக்கிய நிர்வாகிகள், முக்கிய நபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.. அதைத் தொடர்ந்து இரவு விடுதியில் தங்குகிறார். நாளை காலை 5.40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு காலை 10.30 மணியளவில் கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டிற்குச் செல்கிறார்.
பிறகு நாளை காலை 11 மணிக்குத் தங்கும் விடுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார். பிற்பகல் 12.05 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் அமித் ஷா, பிற்பகல் 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்குச் செல்கிறார். இவை தான் ராமேஸ்வரத்தில் அமித் ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளாகும்.

அதைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அமித் ஷா, பிற்பகல் 2 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லிக்குக் கிளம்புகிறார்.
இன்று நடக்கும் பாத யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல பாஜக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ஆர்.பி. உதயகுமார் பங்கேற்கிறார்.
மேலும், இதில் பாரிவேந்தர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் முதலில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் தேமுதிக சார்பில் நிர்வாகி கலந்து கொள்வார் என்று இன்று காலை விஜயகாந்த் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications