"படுவேக வளர்ச்சி.. பரந்தூர் ஏர்போர்ட் அடுத்து பிளான் இதுதான்!" அமைச்சர் சிந்தியா சொன்ன சூப்பர் தகவல்
சென்னை: பல்லாவரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பேசிய சிவில் விமான துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பல்லாவரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷனவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் போக்குவரத்துத் துறை ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். அப்போது கட்டமைப்பிற்கு சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளதாக பிரதமர் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்த சிந்தியா, 2030ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 43 கோடியாக உயரும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகச் சென்னை ஏர்போர்ட் மாறும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உட்கட்டமைப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்த சிந்தியா, மோடியின் ஆட்சியில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பரந்தூர் ஏர்போர்ட் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர், "இன்று சென்னை வரலாற்றிலும் தென்னிந்தியா வரலாற்றிலும் மிக முக்கியமான நாள். இன்று நாட்டில் புது வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டிருக்கிறது. 2014க்கு முன்பு வரை நாட்டில் வெறும் 74 ஏர்போர்ட்டுகள் மட்டுமே இருந்தது. மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் புதிதாக 74 விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்கள் சேர்த்து அதன் எண்ணிக்கை 148ஆக இரட்டிப்பாகியுள்ளது.
இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தான் முக்கியம் என்பதில் பிரதமர் மோடி தெளிவாக உள்ளார். அடுத்த 4, 5 ஆண்டுகளில், 200-க்கும் மேற்பட்ட ஏர்போர்ட் ஹெலிபேட் தளங்களை அமைக்க உள்ளோம். நாட்டின் விமான போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. 2014 உடன் ஒப்பிடுகையில் விமானங்களின் எண்ணிக்கையும் 400இல் இருந்து 75% அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் 3ஆவது பெரிய ஏர்போர்ட்டான சென்னை, இங்கே 43 உள்நாட்டு நகரங்களுக்கும் 24 வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயங்கப்படுகிறது. இப்போது சென்னை ஏர்போர்ட் நெரிலசாக இருக்கிறது. இதைச் சரி செய்யும் வகையில் இப்போது சர்வதேச அளவில் சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1260 கோடி மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை 2.3 கோடி 30 சதவீதம் அதிகரித்து இரண்டு ஆண்டுகளில் 3.50 கோடியாக உயரும். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மனதில் வைத்தே இதை உருவாக்கியுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு விமான நிலையமும், இந்தியாவின் நுழைவு வாயில். எனவே, ஒவ்வொரு விமான நிலையத்திலும் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டமைத்து வருகிறோம்.
சென்னையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள புதிய முனையத்திலும் இதை பார்க்கலாம். தமிழக திருக்கோயில்கள், தஞ்சை ஓவியங்கள், காஞ்சிபுரம் சேலை, தமிழக நடனங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications