4 திசையிலும் ‘எண்ட் கார்டு’? அவசரமா போட்ட ரூட்.. ஆனா எடப்பாடி இதை மறந்துட்டாரே! ஒரே சாய்ஸ் ‘தாமரை’?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியை விட்டு விலகவும் ரெடி என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு அரசியல் ரீதியாக, தேர்தல் கூட்டணி தொடர்பாக நெருக்கடிகள் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பாஜக கூட்டணியை விட்டுப் போனாலும் பரவாயில்லை, ஓபிஎஸ்ஸை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்ற புள்ளிக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருப்பதை அவரது சமீபத்திய பேச்சுகள் காட்டுகின்றன.
மேலும், டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணியில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
பாஜக கூட்டணியில் இல்லஒ என்றால், எடப்பாடி பழனிசாமி, எந்த மாதிரியான கூட்டணியை அமைத்து 2024 தேர்தலில் போட்டியிடுவார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. அதுதொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் பல்வேறு கோணங்களை முன்வைக்கின்றனர்.

கூட்டணி கணக்கு
ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை நெருக்கடி கொடுத்து வருவதால், பாஜக கூட்டணியையே கைகழுவ எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார் என்கிறார்கள். நல்ல சாத்தியமுள்ள கூட்டணியான பாஜகவை விலக்கினால், வேறு எந்த மாதிரியான கூட்டணிக் கணக்குகளை எடப்பாடி பழனிசாமி போடுவார் என்பது பற்றி அரசியல் வல்லுநர்கள் மத்தியில் தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.

பாஜக இல்லாவிட்டால்
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் பாஜகவால் தான் தாங்கள் தோல்வியடைந்ததாக கருதுகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகள் பாஜக கூட்டணியால் பறிபோகின்றன என்பது அவர்களது வாதம். பாஜகவை விட காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணியில் இருந்தால், இன்னும் அதிக வாக்குகளைப் பெற முடியும் என்பது அவர்களின் பேச்சாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுமா?

காங்கிரஸ் வருமா?
திமுக + காங்கிரஸ் இடையே கொள்கைக் கூட்டணி என்ற அளவில் நல்ல பிணைப்பு இருந்தாலும் கூட, சமீபமாக, எழுவர் விடுதலை, 10% இட ஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் கடுமையான புகைச்சல்கள் எழுந்தன. இதற்காகவே கூட்டணி முறியாது தான் என்றாலும், தேர்தல் நேரத்தில் சீட் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைந்தால் காங்கிரஸுக்கு குறைவான சீட்டே ஒதுக்கப்படும், அப்போது காங்கிரஸை வளைக்கலாம் என ஈபிஎஸ் தரப்பு கருதலாம் என்கிறார்கள்.

சீட்? போஸ்ட்?
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியை எதிர்த்து நிற்கும் அளவுக்கு வலுவாகவே இருக்கிறது. பாஜக - அதிமுக அணியை விட திமுக அணி பலமானதாகவே இருக்கும் என்று கருதப்படும் நிலையில் அந்தக் கூட்டணியில் இருந்து ஒரு கட்சி அதிமுக கூட்டணிக்கு மாறுவது சிக்கலானது தான் என்கிறார்கள். என்னதான் அதிமுக கூட்டணியில் சீட் அதிகம் கொடுத்தாலும், திமுக கூட்டணியில் நின்றாலே ஜெயிக்கலாம் என்ற உத்தரவாதத்தை விட்டுவிட்டு எதிரணிக்குச் செல்ல யாரும் விரும்பமாட்டார்கள் என்கிறார்கள்.

வின் வின் கூட்டணி
அதிமுக வட மாவட்ட நிர்வாகிகளைப் பொறுத்தவரை, பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கிறது. வாக்கு வங்கியின் அடிப்படையில் அது வின் + வின் கூட்டணியாக இருக்கும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். அன்புமணியும், அதிமுகவால் ராஜ்யசபா எம்.பி ஆனவர் என்கிற வகையில், இந்தக் கூட்டணிக்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கலாம் எனப் பேசப்படுகிறது.

லெஃப்ட் - வாய்ப்பில்லை
அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்கவும் அதிமுக தரப்பு யோசித்தாலும், அந்த வாய்ப்பு மிகவும் கடினம் தான் என்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால், எடப்பாடி அணியோடு இடதுசாரிகள் கூட்டணி அமைக்க, ஈபிஎஸ் சொல்வது போல 1% கூட வாய்ப்பில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.

தமாகா வரலாம்
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஐஜேகே பாரிவேந்தர், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் பாஜகவோடு தீவிரமான இணக்கத்தில் இருப்பதால் அவர்களும் பாஜக இல்லாமல் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. அதேசமயம், தமாகா ஜி.கே.வாசன், அதிமுக ஆதரவோடு ராஜ்யசபா எம்.பி ஆனவர் என்பதால் அவர் வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கலாம் எனக் கருதப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் சேரவே வாய்ப்பு அதிகம் என வெளிப்படையாகவே தெரிவதால், அதிலும் ஈபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே.

சீமான் எந்தப் பக்கம்?
நாம் தமிழர் கட்சியின் சீமான், இப்போது ஸ்டாலினை அண்ணன் என்று பாசமாகப் பேசி வருவதைப் பார்த்தால் அவரும் கூட திமுக பக்கமே சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே திமுக கூட்டணியில் சேராவிட்டாலும் கூட எடப்பாடி அணியுடன் நிச்சயம் கூட்டணி அமைக்க மாட்டார் என்கிறார்கள். சீமான், அதிமுக வாக்குகளையே பெரும்பாலும் பிரிக்கிறார் என்பதால் சீமானை எடப்பாடி பழனிசாமி சேர்க்க விரும்புவாராம்.

நாலாபக்கமும்
கடந்த தேர்தல்களில் சீமானின் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த நிலையில், வாக்கு சரிந்ததெல்லாம் அதிமுக பக்கம்தான். ஜெயலலிதா இருந்தபோது 1 சதவீதமாக இருந்த நாதக வாக்கு வங்கி, கடந்த தேர்தலில் 7 சதவீதமாக அதிகரித்தது. அதிமுக கணிசமான அளவுக்கு வாக்கு பலத்தை இழந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இதனால், வலுவான கூட்டணி இல்லாமல் நின்றால், எடப்பாடி பழனிசாமி அணிக்கான வாக்கு நாலாபுறமும் சிதறுவது உறுதி என்கிறார்கள்.

வேறு சாய்ஸே இல்லை
இதையெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவை விட்டால் வேறு ஆப்ஷனே இல்லை எனும் நிலை தான் வரும், பாஜக தலைமையுடன் உடன்பட்டு, ஓபிஎஸ், அமமுக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகள் அடங்கிய கூட்டணியையே அமைக்க வேண்டிய சூழல் வரும். அதில் பாமகவை இணைப்பது எடப்பாடிக்கு கூடுதல் பலன் தரலாம், மற்றபடி, பாஜகவை விடுத்து எடப்பாடி பழனிசாமி வேறு என்ன கணக்குப் போட்டாலும் தனித்து விடப்படும் சூழல் தான் நேரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications