"வாட்ச் அரசியல்.." டக்குனு வந்து விழுந்த கேள்வி.. சிரித்துக் கொண்டே அன்புமணி சொன்ன பதிலை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வாட்ச் அரசியல் தான் பேசுபொருள் ஆகியுள்ளது. இதனிடையே இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் கேட்ட கேள்விக்கு அவர் சிரித்துக் கொண்டே நறுக்கெனப் பதிலளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் கிளை பொறுப்பாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி கட்சி வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்.
டிசம்பர் 30ஆம் தேதி புதுச்சேரியில் பாமக புத்தாண்டு பொதுக்குழு! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
அன்புமணி
மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார். கிராம மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "பண்டிகை காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போலக் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
வாட்ச் அரசியல்
அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர். பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளைக் காத்திடும் வகையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தில் கரும்பினை சேர்த்து வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இப்போது வாட்ச் அரசியல் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, " நான் வாட்ச் கட்டவில்லை" எனச் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
கொரோனா
இதையடுத்து கொரோனா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்தியாவில் எல்லா கொரோனா தொற்றும் வந்து போய்விட்டது. தற்போது சீனாவில் வந்திருப்பது BF.7 வகை ஒமிக்ரான் கொரோனா தொற்று தான்.. இந்த BF 7 வகை ஒமிக்ரான் கொரோனா கடந்த ஜூலை மாதமே இந்தியாவில் வந்துவிட்டது. நமக்குப் பெரியளவில் இந்த வகை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, இப்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.
இந்தியா
இந்தியாவிலுள்ள 98 சதவிகித மக்களுக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று வந்து போய் விட்டது.. எனவே, நாம் சீனா போல் எங்கு வைரஸ் பாதிப்பு கையை மீறிச் செல்லுமோ என்று அஞ்சத் தேவையில்லை.. பொதுமக்கள் அனைவரும் முறையாக வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இருந்தாலே போதும்" என்று அவர் தெரிவித்தார். சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது உலகெங்கும் மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சத்தை கிளப்பியுள்ளது.
உறுதியேற்பு
இதன் பின் காஞ்சிபுரம் மாநகராட்சி வழியாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்குச் சென்ற அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கரமடம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்குத் தந்தை பெரியார் நினைவு தினத்தை ஒட்டி 50க்கும் மேற்பட்ட பாமக கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பாமக தொண்டர்கள் தந்தை பெரியார் சிலை முன்பு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.
மத்திய அரசு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சீனா உட்பட குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் கட்டாயம் சோதனை செய்யப்படுகிறது. அதேபோல வரும் டிச.27இல் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.