தலையில் 4 இடங்களில் காயம்! மருத்துவரை இளைஞர் தாக்கியது ஏன்? என்ன நடந்தது? துணை முதல்வர் உதயநிதி பரபர
சென்னை: சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மருத்துவரை துணை முதல்வர் உதயநிதி நேரில் சந்தித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கேன்சர் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜியை இன்று காலை விக்னேஷ் என்ற நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாய்க்கு உரியச் சிகிச்சையைத் தரவில்லை என்பதால் அவர் மருத்துவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து உதயநிதி நேரில் கேட்டறிந்தார்.
உதயநிதி: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மருத்துவர் பாலாஜிக்கு 4 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 6 மாதங்களாகச் சிகிச்சையில் இருந்த தாயுடன் வருபவர் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் துணை முதல்வர் உதயநிதி மேலும் கூறுகையில், "அவரது மருத்துவரான பாலாஜி என்பவரை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் மருத்துவர் இப்போது ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞரின் தாயார் கேன்சர் பிரச்சினைக்காக இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சுயநினைவு: இதற்கிடையே சிகிச்சையின் போது ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து அந்த நபர் ஏற்கனவே மருத்துவர் பாலாஜியை சந்தித்துக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் காலை மருத்துவமனைக்கு வந்த இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவர் இப்போது ஐசியுவில் உள்ளார். தற்போது மருத்துவர் மயக்க நிலையில் இருக்கிறார். 3 முதல் 4 மணி நேரத்தில் அவர் சுயநினைவுக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது.
காயம்: தாக்குதல் நடத்திய அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கச் செயல். அந்த இளைஞர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். தலை பகுதியில் 4 பகுதியில் குத்தப்பட்டுள்ளது. மேலும், தலை, இடது கழுது, இடது தோள்பட்டை, இடது காது மடலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம். மருத்துவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறேன்.
சந்தேகம் வரவில்லை: தாக்குதல் நடத்திய நபரின் தாயாருக்கு அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகச் சரியான முறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தாயாரை அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிலையில், காலை வந்துள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வரை இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். என்ன காரணம் எனத் தெரியவில்லை திடீரென அந்த இளைஞர் இந்த தவறான முடிவை எடுத்துள்ளார். அவர் சிறந்த மருத்துவர் என்பதில் சந்தேகம் இல்லை.
பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். இந்த நபரே கூட ஏற்கனவே பல முறை தாயாருக்குச் சிகிச்சை அளிக்க வந்து சென்று இருக்கிறார். இதன் காரணமாகவே மருத்துவர் உட்பட யாருக்கும் அவர் மீது எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம். மற்ற நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications