இ சேவை மையத்தில் பட்டாவுக்கு விண்ணப்பித்த பின்.. விஏஓ, சர்வேயர் லஞ்சம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: இன்றைக்கு நீங்கள் நிலம் வாங்கினால் அல்லது இடம் வாங்கினால் உட்பிரிவுடன் கூடிய பட்டா இல்லை என்றால் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிடும். ஆனால் முன்பு வாங்கிய நிலங்கள், உட்பிரிவுடன் கூடிய பட்டா என்றால் தனியாகவே வாங்க வேண்டியதிருக்கும். பொதுவாக இன்றைக்கு பட்டா வாங்க இசேவை மையத்தில் பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். உங்களிடம் விஏஓ, சர்வேயர், கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோர் லஞ்சம் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு வருவாய் துறையில் உள்ள சில அதிகாரிகள் பட்டா வாங்க, பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. என்னதான் இசேவை மையத்தில் போய் விண்ணப்பித்தாலும், வேலை நடக்க வேண்டும் என்றால், கிராம நிர்வாக அதிகாரி, சர்வயேர், கிராம நிர்வாக உதவியாளரை கவனித்தால் தான் பைல், அடுத்தகட்டமாக ஆர்ஐக்கும், தாசில்தாருக்கும் செல்வதாக புகார்களை பொதுமக்கள் கூறுகிறார்கள்.

எல்லா அரசு அலுவலகங்களில் இப்படியான நிலை என்றாலும், சில அரசு அலுவலகங்களில் ஒரு சிலருக்கு சேவைகளை பெறுவதற்கே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருப்பதாக பலர் புலம்புகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பத்திரப்பதிவு செய்து பட்டா வாங்க அலைவோர் தான்.. பத்திரப்பதிவு செய்த உடன் நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், இடைத்தரகர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலர், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இசேவை மையத்தில் நீங்கள் உங்கள் நிலத்திற்கு பட்டா வாங்க விண்ணப்பித்துவிட்டீர்கள் என்றால், அடுத்த சில நாட்களில் உங்கள் நிலத்தை அளக்க சர்வேயர் இந்த தேதியில் நேரில் வந்து நிலத்தை பார்வையிடுவார் என்று அரசின் சார்பில் மெசேஜ் வரும். அதன்பிறகு உங்களிடம் விஏஓ, சர்வேயர் உள்ளிட்ட யாராது பட்டா பெறுவதற்கு லஞ்சம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்?அரசின் மெசேஜ் படி உங்கள் நிலத்தை பார்வையிட வரும் சர்வேயர் அல்லது விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் யாராவது பணம் கேட்டால் பணம் கொடுக்க வேண்டாம். அவர்கள் பணம் கேட்பதை வீடியோவாகவோ அல்லது ஆடியோவாகவோ பதிவு செய்யுங்கள். பின்னர் இன்னொரு நாளில் தருவதாக வாக்குறுதி அளியுங்கள். பின்னர் அந்த ஆடியோ அல்லது வீடியோ பதிவுடன் நேராக உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவியுங்கள்.
நீங்கள் புகார் அளித்த உடனே, புகாரை பதிவு செய்யும் உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயணம் தடவிய நோட்டுகளை உங்களுக்கு தருவார்கள். அதன்பின்னர் உங்ளிடம் லஞ்சம் கேட்ட விஏஓ அல்லது சர்வேயர், கிராம உதவியாளர் உள்பட எந்த அரசு அதிகாரியாக இருந்தாலும் அவரை நேரில் போய் பாருங்கள். அவரிடம் லஞ்ச பணத்தை கொடுங்கள்.. அப்படி நீங்கள் பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக விஏஓ, சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக கையும் களவுமாக பிடிப்பார்கள் .
லஞ்சப்பணத்துடன் சிக்கும் விஏஓ, சர்வேயர் உள்பட அதிகாரிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்வார்கள்.பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே உங்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைப்பது தான், லஞ்சத்தை ஒழிக்கவும், நேர்மையான நிர்வாகம் பிறக்கவும் ஒரே வழியாக உள்ளது.












Click it and Unblock the Notifications