"மாப்பிள்ளை"க்கு ஒன்னு.. கொங்குவுக்கு ஒன்னு.. "செளத்"துக்கு இன்னொன்னு.. பரபரக்கும் திமுக!
சபரீசன் ராஜ்ய சபா எம்பியாக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருக்கிறது.. எனவே, இதற்கான போட்டி நடக்க உள்ளது.. இந்த 3 இடங்களிலும் யார் யார் போட்டியிட போகிறார்கள்? யார் வெற்றி பெற போகிறார்கள்? யாருக்கு நிறைய வாய்ப்பு உள்ளது? என்பது குறித்த விவாதங்களும், எதிர்பார்ப்புகளும் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன.
இப்போதைக்கு டாப் லிஸ்ட்டில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் உள்ளது திமுக.. அதனால் இந்த 3 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், 3 தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரசுக்கும், மற்ற 2 இடங்களில் திமுகவும் எடுத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
காங்கிரசுக்கு ஒரு இடம் தருவதாக திமுக தரப்பில் ஏற்கனவே வாக்குறுதி தரப்பட்டுள்ளதாம்.. ஒருவேளை அப்படி காங்கிரசுக்கு ஒரு இடம் என்றால், மறுபடியும் அந்த கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை வெடிக்க வாய்ப்புள்ளது.
சட்டசபை தேர்தலில் ஏழைகள் & நடுத்தர வர்க்கத்தினரின்.. முதல் சாய்ஸ் திமுக தான்... அதிமுக நிலை என்ன?
சீட்
அதேசமயம் திமுகவில் யாருக்கு சீட் தரப்படும் என்ற ஆவல் எழுந்துள்ளது.. வழக்கமாக, சீனியர்களுக்கு இந்த ராஜ்ய சபா பதவி தரப்படும்.. அல்லது சட்டசபை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் ராஜ்ய சபா பதவிக்கு பரிந்துரை செய்யப்படும்.. ஆனால், இந்த முறை 3 விதமான பேச்சு எழுந்துள்ளது.. இளைஞர்களுக்கே முன்னுரிமை என்று ஒரு தரப்பு சொல்கிறது.. கொங்குவில் கோட்டை விட்டுவிட்டதால், இந்த முறை கொங்குவை சரிக்கட்ட அந்த மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பு என்கிறார்கள்..!
திமுக
இது ஒரு பக்கம் இருந்தாலும், வேட்பாளர்கள் யாராக இருக்கக்கூடும் என்று சில பெயர்களும் திமுக தரப்பில் உச்சரிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில், அதிமுக அமைச்சர்களுக்கு கடைசிவரை டஃப் தந்த திமுக வேட்பாளர்களுக்கே அந்த வாய்ப்பு தரப்படும் என்கிறார்கள்.. குறிப்பாக, தங்க தமிழ்செல்வன் பெயர் அடிபடுகிறது.. அதுபோலவே, தொண்டாமுத்தூரில் வேலுமணிக்கு கடைசிவரை டஃப் தந்த கார்த்திகேய சிவசேனாபதி பெயரும் அடிபடுகிறது.
சுப்புலட்சுமி
இதில் இன்னொரு சாய்ஸ், சுப்புலட்சுமி ஜெகதீசனும் இருக்கிறார்... இவர்தான் அடுத்த சபாநாயகர் என்ற பேச்சு ரிசல்ட் வரும்வரை வலுவாக இருந்து கொண்டே இருந்தது.. ஆனால், அதிர்ச்சி தோல்வியை சுப்புலட்சுமி சந்தித்தது யாருமே எதிர்பாராத ஒன்று.. மொடக்குறிச்சி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியுற்றார். இதையடுத்து, அவருக்கு ராஜ்யசபா கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது.
சபரீசன்
இதில் இன்னொரு பெயர்தான் சர்ப்ரைஸ் ஆக உள்ளது.. அவர்தான் சபரீசன்.. இதுவரை வெளியில் தெரியாமல் சத்தமின்றி அரசியல் செய்து வந்தார்.. இந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியே சபரீசன்தான்.. ஐபேக் டீமை ஸ்டாலினுக்கு அறிமுகம் செய்து வைத்தது முதல் பெரும்பாலான வியூகங்களை கச்சிதமாக செய்து முடித்தவர் சபரீசன்தான்.
கருணாநிதி
அதுமட்டுமல்ல, கருணாநிதி இறந்தபிறகு டெல்லி லாபியை சபரீசன்தான் இவ்வளவு நாள் கவனித்து வருகிறார்.. கருணாநிதிக்கு முரசொலி மாறனும், அதையடுத்து டிஆர் பாலுவும், கனிமொழியும் எப்படி நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்களோ, அதுபோலவே, ஸ்டாலினுக்கு சபரீசன் விளங்கி வருகிறார்.. எனவே, ராஜ்யசபா பதவியை சபரீசனுக்கு தந்தாலும் ஆச்சரியமில்லை என்றும், அன்று கருணாநிதிக்கு மாப்பிள்ளை முரசொலி மாறன் துணையாக இருந்ததுபோல, ஸ்டாலினுக்கு மாப்பிள்ளை சபரீசன் துணையாக இருப்பார் என்றும் சொல்கிறார்கள்..!