ஜெயலலிதா இறந்தது எப்போது?.. இரு வேறு பதில்களால் ஆறுமுகசாமி விசாரணையில் குழப்பம்
சென்னை: சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் சசிகலா குடும்பத்தினரும் அப்பல்லோ மருத்துவர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசுஅமைத்தது.
ஆதாரங்கள்
இந்த விசாரணை கமிஷனில் அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகிகள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் என பலர் ஆஜராகி வாக்குமூலமும் தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் அளித்து வருகின்றனர்.
மாரடைப்பு
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இதயநோய் நிபுணராக உள்ள டாக்சடர் பிரசாத் சந்த் ஜெயின், நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் ஜெயலலிதாவுக்கு நவம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.
உயிரிழப்பு
அப்போது ஒரு முறை மட்டுமே இதயம் இயல்பாக இயங்கியது என தெரிவித்துள்ளார்.தார். இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரோ ஜெயலலிதா டிசம்பர் 4-ஆம் தேதி உயிரிழந்ததாக தெரிவித்து வருகின்றனர். அதே நிலையில் அப்பல்லோ மருத்துவமனை ஆவணங்களில் ஜெயலலிதா 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக பதிவாகி உள்ளது.
தகவல்கள்
ஏற்கெனவே ஜெயலலிதா மரண விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளால் அதிமுக தொண்டர்களும் மக்களும் குழப்பத்தில் உள்ளனர். இது மட்டுமல்லாமல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையால் குழப்பம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.