விடாமுயற்சியுடன் களமிறங்கிய அஜித் குமார்.. போர்ச்சுகலில் தீவிர பயிற்சி.. அடுத்த ரேஸ் எப்போது?
சென்னை: அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அடுத்த பந்தயத்திற்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. போர்ச்சுகல் நாட்டின் எஸ்டோரிலில் நடக்கவுள்ள கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்க உள்ளது தெரிய வந்துள்ளது.
துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட காலமாக இதன் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், இன்று வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அஜித் குமாரின் ரசிகர்கள் நேற்றிரவு முதலே விடாமுயற்சி படத்தை காண திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். திரையரங்குகளில் அவரது பாடல்களை இசையமைத்தும், டான்ஸ் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள அஜித் குமார் இதுகுறித்த எந்தவொரு பதற்றமும் இல்லாமல் ஜாலியாக போர்ச்சுகலில் இருக்கிறார்.
அஜித் குமார் ரேஸிங் குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் ஜாலியாக ரைய்டு செல்லும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில், அஜித் குமாரின் ரேஸிங் அணி 911 ஜிடி 3 என்ற கார் பந்தயப் பிரிவில் 3வது இடம்பிடித்து அசத்தியது. அதேபோல் அஜித் குமாருக்கும் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் விருது அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித் குமார் போர்ச்சுகலில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தெற்கு ஐரோப்பியா போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. இந்த கார் பந்தயம் தெற்கு ஐரோப்பியா பிராந்தியத்தில் இருக்கும் கார் பந்தய வீரர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. துபாய் கார் ரேஸை போல் இந்த பந்தயமும் 6 மணி நேரமாக நடக்கும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் போர்ச்சுகல் நாட்டின் எஸ்டோரில் நகரில் கார் பந்தயம் நடக்கவுள்ளது. இந்த கார் பந்தயத்தில் RedAnt ரேஸிங் அணிக்காக 28 மற்றும் 48 ஜெர்சி நம்பர் கொண்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 28 ஜெர்சி எண் அஜித் குமாருடையது. ஏற்கனவே பயிற்சியாளர் மதியூ உடன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டில் அஜித் குமாரை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நாளில், தனது கனவை நோக்கி அஜித் குமார் அடுத்த அடியை எடுத்து வைக்கவுள்ளார். இது அஜித் குமாரின் ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளை நடக்கவுள்ள ரேஸ் மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications