போட்ட எஸ்டிமேட்டை விட குறைந்த செலவில் பாலங்கள்! மேயராக இருந்த போது ஸ்டாலின் உருவாக்கிய வரலாறு!
சென்னை: தாம் மேயராக இருந்த போது தான், போட்ட எஸ்டிமேட்டை விட குறைந்த செலவில் சென்னையில் 9 பாலங்கள் கட்டியதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் மாநகராட்சியின் சார்பில் பாலங்கள் கட்டிய வரலாற்றையும் தாம் தான் முதல்முறையாக உருவாக்கினேன் எனக் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கூடிய ஃபிளாஷ்பேக் வருமாறு;

''நானும் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தவன்தான். உங்கள் அன்போடு, ஆதரவோடு இரண்டு முறை பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் நான். அப்போதுதான் முதன்முதலில் சென்னை மாநகராட்சியின் சார்பில், பாலங்கள் கட்டக்கூடிய பணிகளை தொடங்கினோம். எப்போதுமே அரசாங்கத்தின் சார்பில்தான் பாலங்கள் கட்டுவார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை என்று அரசின் பல்வேறு துறைகளின் சார்பில்தான் கட்டுவார்கள், மாநகராட்சியின் சார்பில் பாலங்கள் கட்டிய வரலாறு கிடையாது.''
''முதன்முதலில் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மேயராக பொறுப்பேற்றதற்கு பிறகு அதற்கான முயற்சியில் இறங்கினேன். அதில் பத்து பாலங்களை கட்ட முடிவெடுத்து, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தோம். அதில் 1 பாலம் ஏன் காலம் கடந்தது என்றால், அதில் technical problem ஒன்று வந்தது. இந்த பெரம்பூர் மேம்பாலம். அதனால் கொஞ்சம் காலம் கடந்தது. ஆனால் 9 மேம்பாலங்களை குறித்த காலத்திற்கு முன்பே இவ்வளவு கோடி ரூபாயில் கட்டவேண்டும் என்று சொல்லி ஒரு மதிப்பீட்டுத் தொகை ஒன்று போடுவார்கள். ''
''எப்போதும் அரசாங்கத்தின் சார்பில், மாநகராட்சியின் சார்பில் அல்லது உள்ளாட்சித்துறையின் சார்பில், ஏதாவது ஒரு கட்டிடமோ ஒரு பணியை செய்வதற்கு முதலில் மதிப்பீடு செய்து அதற்கு ஒரு தொகையை ஒதுக்குவார்கள். ஆனால் அதை முடிக்கின்ற நேரத்தில் கொஞ்சம் தொகை அதிகமாகும். விலைவாசி சூழ்நிலை கருதி, காலமும் கடந்துவிடுகின்ற காரணத்தால் கொஞ்சம் மதிப்பீடு அதிகமாகிவிடுகிறது. நான் பெருமையோடு சொல்கிறேன். 9 மேம்பாலங்கள் நாம் கட்டியபோது மதிப்பீடு தொகையை விட குறைந்த மதிப்பிட்டில், செலவு செய்து இதுவரை சென்னை மாநகராட்சியில் இல்லாத ஒரு மிகப்பெரிய வரலாற்றை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக இருந்தபோது அந்த காரியத்தை நான் செய்தேன். இது அனைவருக்கும் தெரியும்.''
''பாலங்களாக இருந்தாலும் சரி, சாலைகளாக இருந்தாலும் சரி, மழைநீர் கால்வாய்களாக இருந்தாலும் சரி, கழிவுநீர் கால்வாய்களாக இருந்தாலும், அனைத்தையும் இன்றைய தேவைகளுக்காக மட்டுமல்ல, நாளைய தேவைகளையும் கருதி நாளைய மக்கள் தொகையையும் கணக்கிட்டு அமைத்துத் தருவதை நோக்கமாக இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.''












Click it and Unblock the Notifications