கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. பர்சனல் நம்பர்களுக்கு SMS எப்போது வரும்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்களுக்கான கள ஆய்வு இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது. டிசம்பர் மாதம் பணம் அனுப்ப வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட ஆய்வு பணிகள் நடக்கின்றன.
கிராம நிர்வாக அலுவலர்கள் இதற்கான பட்டியலை எடுத்து உள்ளனர். கள ஆய்வு செய்யப்பட்ட பயனாளிகளில் யாரெல்லாம் என்று ஆய்வு செய்யப்பட்டு.. அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படுகின்றன. நவம்பர் 14 ஆம் தேதிக்குள் லிஸ்டை இறுதி செய்ய வேண்டும் என்பதால் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. நவம்பர் இறுதியில் மெசேஜ் அனுப்பி சோதனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ₹1,000 மாத உதவித்தொகை பெறுவதற்கான புதிய விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆய்வு செய்யப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தகுதியுள்ள பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் கடந்த 26 மாதங்களில் சுமார் 1.14 கோடி பெண் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் ₹30,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பலனை மேலும் பல பெண்கள் பெறும் வகையில் சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு சேவைகளை எளிதாக்கும் நோக்கில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை மாநில அரசு ஜூன் 19 அன்று தொடங்கியது.
நவம்பர் 15ஆம் தேதிக்குள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 10,000 முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 9,055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுவரை, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் 28 லட்சம் பெண்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார். இந்த தகவல் அக்டோபர் 16, 2025 அன்று மாலை 6:58 மணிக்கு வெளியிடப்பட்டது. நவம்பர் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை மனுக்கள் எல்லாம் பெறப்பட்ட பின்பே இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். , காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும். ஒன்றிரண்டு மாதங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications